இனி ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய அவசியம் இல்லை.. உங்கள் டிக்கெட்டை மற்றவருக்கு மாற்றலாம்.. வந்தது புதிய வசதி..
இந்தியாவில் பேருந்து, விமானம் போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ரயிலில் குறைந்த விலையில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் போக முடியும் என்பதால் தான் இதை அதிக மக்கள் தேர்வு செய்கின்றனர். இதுதவிர ரயிலில் பல சிறப்பான வசதிகள் உள்ளன.
அதுவும் நீண்டதூர பயணத்தின்போது அலுப்பு, சோர்வு உடல்வலி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரயிகள் தான் சரியான தேர்வு. இந்நிலையில் ரயில்வே அமைப்பு பயணிகளுக்கு ஒரு சிறப்பான வசதியை வழங்குகிறது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிகள் கடைசி நேரத்தில் தங்களின் பயணத் திட்டத்தை மாற்ற வேண்டிய நிலைமை வந்தால், அந்த டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே ( Indian Railways) வழங்குகிறது. குறிப்பாக ரிஷர்வேஷன் டிக்கெட் எடுக்கும் போது கொடுத்த பயணிகளின் பெயரை மாற்ற முடியும். இதன் மூலம் வேறு நபர்கள் அந்த டிக்கெட்டில் பயணிக்க முடியும்.
ஆனாலும் இந்த வசதிக்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதேபோல் இது போன்ற வசதி இருப்பது பலருக்கு தெரிவதில்லை. இன்னும் சிலருக்கு இந்த வசதியை எப்படிப் பெறுவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. இப்போது இதுகுறித்த விவரங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1.நீங்கள் முன்பதிவு செய்ய ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவதாக இருந்தால், ரயில் புறப்படுவதற்குக் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பு அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு அலுவலகத்தை (Reservation Counter) அணுகி இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
2.குறிப்பாக விண்ணப்பத்துடன் மின்னணு முன்பதிவு சீட்டின் (E-ticket) பிரிண்ட் அவுட் மற்றும் யாருடைய பெயருக்கு மாற்ற வேண்டுமோ அவரின் அடையாள அட்டை நகலையும் இணைக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும்.
3.அடுத்து உங்கள் டிக்கெட்டை மற்றவர்களுக்கு மாற்ற சில குறிப்பிட்ட நிபந்தனைகளும் உள்ளன. அதாவது சலுகை விலையில் பெறப்பட்ட டிக்கெட்டுகளுக்கு (Concession Tickets) பெயர் மாற்றம் செய்யும் வசதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை உங்களது தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன், மகள், மனைவி அல்லது கணவன் ஆகியோருக்கு மட்டுமே மாற்ற முடியுமே தவிர முன்பின் தெரியாதவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நண்பர்களுக்கு டிக்கெட்டை மாற்ற முடியாது.
5. அதேசமயம் பணி நிமித்தமாகப் பயணம் செய்யும் அரசு ஊழியர்கள், தகுதியான அதிகாரியின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின்படி 24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன மாணவர்கள் குழுவாகப் பயணிக்கும்போது, அந்நிறுவனத்தின் தலைவர் 48 மணி நேரத்திற்கு முன்பு விண்ணப்பித்து ஒரு மாணவரின் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
7.நீங்கள் திருமணத்திற்கு ஒரு குழுவாக போக நினைத்தால் அதில் ஒருவருடைய டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற 48 மணி நேரத்திற்கு முன்பு விண்ணப்பித்து ஒரு உறுப்பினரின் முன்பதிவை மற்றொருவருக்கு மாற்றலாம்.
8. மேலும் தேசிய மாணவர் படை (NCC) குழுக்களுக்கு, குழுத் தலைவர் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன் பெயர் மாற்றத்தைக் கோரலாம்.

9. ஆனாலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இத்தகைய பெயர் மாற்றக் கோரிக்கைகள் ஒருமுறை மட்டுமே ஏற்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பெயர் மாற்றங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக சில அவசர வேலையால் பயணம் மேற்கொள்ள முடியாமல் போகும் போது அந்த பயணிகள், தங்கள் டிக்கெட்டில் குடும்ப உறுப்பினர்கள் பயணிக்க இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








