போலீசுக்கே விபூதி அடித்த கும்பல்.. QR ஸ்கேன் செய்ய போறீங்களா? லட்சங்களில் இழக்க வாய்ப்பு.. உஷார் மக்களே..
பொதுமக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் போலீசிடம் (Police) சென்று உதவி கேட்பார்கள். ஆனால், இப்போதோ ஒரு போலீசுக்கே பிரச்சனை எழுந்து, அவரே காவல்நிலையம் சென்று புகார் அளிக்கும் படியான ஒரு வினோத சோதனை நடந்தேறியுள்ளது. QR கோட் மூலம் பேக்கரியில் பணம் செலுத்த முயன்ற காவல் அதிகாரி (Police constable) ஒருவரிடம் இருந்து 2.3 லட்சம் பணம் ஆன்லைன் மூலமாகவே (online scam and phishing) திருடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ் (digital payment apps) பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையில் புதிய பீதியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு பல விழிப்புணர்வு செய்திகளை அவ்வப்போது தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இருப்பினும், மக்கள் பலர் தினம் தினம் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி பல லட்சம் ரூபாய் வரை இழந்து வருகிறார்கள். சைபர் பிரிவுகளிலிருந்து தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்திய போதிலும், ஒரு காவல்துறை அதிகாரியே ஏமாற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசுக்கே விபூதி அடித்த கும்பல்.. QR ஸ்கேன் செய்ய போறீங்களா? உஷார் மக்களே:
புனே அருகே சஸ்வாடில் வசிக்கும் அந்த காவலர், உள்ளூரில் உள்ள ஒரு பேக்கரியில் பணம் செலுத்த முயற்சித்தபோது மோசடி நிகழ்ந்துள்ளது. பரிவர்த்தனையை முடிக்க அவர் ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்த சில நிமிடங்களில், அவரது வங்கி சேமிப்பு கணக்கு, வங்கி சம்பள கணக்கு, கோல்டு லோன் கணக்கு, கிரேடு கார்டு என்று எங்கெல்லாம் பணம் இருக்க வாய்ப்பிருக்கிறதோ அந்த இடங்களில் இருந்து பணம் திருடப்படுவதை அவர் மொபைல் போன் மூலம் லைவில் பார்த்திருக்கிறார்.
QR குறியீட்டை ஸ்கேன் செய்த சிறிது நேரத்திலேயே, அவரது சேமிப்பு கணக்கிலிருந்து ரூ. 18,755 அங்கீகரிக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டதைக் கண்டறிந்தார். அவர் தனது மற்ற வங்கிக் கணக்குகளைக் கவனித்தபோது அந்த காவலரின் நிலைமை இன்னும் மோசமானது தெரியவந்தது. அதில் அவரது சம்பளக் கணக்கிலிருந்து கூடுதல் அங்கீகரிக்கப்படாத தொகை எடுக்கப்பட்டதையும், அதில் ரூ. 50 மட்டுமே இருந்ததையும் கண்டறிந்தார்.
கோல்டு லோன் கணக்கை கூட விட்டு வைக்காத மோசடிக்காரர்கள்:
அந்த காவலரின் தங்கக் கடன் கணக்கிலிருந்து ரூ. 1.9 லட்சம் தொகைக்கு ஒரு OTP வந்திருக்கிறது. இப்போது ஆன்லைன் மோசடி மிகவும் மோசமானதாக மாறியது. OTP தகவலை அவர் யாருடனும் பகிரவில்லை என்றாலும், 1.9 லட்சம் ஒரே தொகையாக திருடப்பட்டது. கூடுதலாக, மோசடி செய்பவர்கள் அவரது கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி மொத்தம் ரூ. 14,000க்கு இரண்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டு பணத்தை திருடியுள்ளனர்.
தாமதிக்க நேரம் செல்ல செல்ல மோசடி இன்னும் மோசமாவதை உணர்ந்த அதிகாரி உடனே தனது வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டை முடக்கி கூடுதல் நிதி இழப்பைத் தடுத்திருக்கிறார். மோசடி குறித்த விசாரணையில், மோசடி செய்பவர்கள் அந்த காவலரின் மொபைல் போன் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு தீங்கிழைக்கும் APK கோப்பை பதிவிறக்கச் செய்யும்படி அவரை ஏமாற்றி அணுகல் பெற்றது தெரியவந்துள்ளது.
OTP பகிரப்படவில்லை இருப்பினும் பணம் திருடப்பட்டது எப்படி? ஆடிப்போன போலீஸ்கரர்:
மோசடி செய்பவர்கள் அனுப்பிய ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பை அந்த காவலர் கிளிக் செய்திருக்கலாம், அதன் மூலம் அவர்கள் தனது சாதனத்தில் மால்வேர் அல்லது ஸ்பைவேரை நிறுவ முடிந்தது. இந்த மால்வேர் குற்றவாளிகளுக்கு லாக்கின் விவரங்கள் மற்றும் OTPகள் போன்ற உணர்திறன்மிக்க தரவுகளைப் பிடிக்க உதவியிருக்கலாம், இதன் மூலம் அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி பல கணக்குகளுக்கு அணுகல் பெற முடிந்தது.
தொடர்ந்து நடக்கும் விசாரணையில், அந்த காவலர் ஸ்கேன் செய்த QR குறியீடு தீங்கிழைக்கும் APK கோப்பு பதிவிறக்கத்திற்கு அவரைத் திருப்பிவிடுவதற்காக மாற்றப்பட்டதா அல்லது மோசடி செய்பவர்கள் வேறு ஏதேனும் ஏமாற்று முறைகளைப் பயன்படுத்தினார்களா என்பதையும் ஆராயப்படுகிறது. டிஜிட்டல் கட்டணங்கள் பிரபலமடைந்து வருவதால், இந்த மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.


Click it and Unblock the Notifications








