திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. இந்தியாவில் கெத்தா ரீஎன்ட்ரிக்கு தயாராகும் பப்ஜி நிறுவனம்..
இந்தியாவில் தடை செய்யப்பட்ட உலக புகழ்பெற்ற பப்ஜி கேம் தற்பொழுது மீண்டும் இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கூட்டு வைத்திருந்ததைத் தொடர்ந்து இந்த கேம் தடை செய்யப்பட்டது.

இந்தியாவில் மட்டும் இந்த கேமை சுமார் 50 மில்லியனுக்கு அதிகமானோர் விளையாடி வந்தனர், சீனாவுடனான மோதல் காரணமாக இந்தியா சீன பயன்பாடுகளைத் தடை செய்தது. அந்த வரிசையில் பப்ஜி கேமும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த தடைக்குப் பின்னர் தற்பொழுது பப்ஜி கேமிங் நிறுவனம், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் ரத்து செய்து இந்தியாவில் தனித்துச் செயல்பட முன்வந்துள்ளது.

அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் தற்பொழுது அதன் சீன உறவை ரத்து செய்து. இந்தியாவில் ஒரு நிறுவனத்தை அமைத்துத் தனித்துச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான பப்ஜியின் புதிய வெர்ஷன் விரைவில் வெளியாகும் என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகிவருகிறது.

இந்தப் புதிய பப்ஜி இந்திய வெர்ஷனில் டென்செண்டின் தலையீடு இருக்காது என்றும், முழுக்க முழுக்க தென் கொரியாவை சேர்ந்த பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டுமே இதை கையாளும் என்றும் உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கொரியா, சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பிரத்தியேக பப்ஜி வெர்ஷன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி நிறுவனம் புதிய பிரத்தியேக வெர்ஷனை இந்திய கேமிங் ரசிகர்களுக்காக வெளியிடுவது மட்டுமின்றி, இந்தியாவில் பப்ஜிக்கென்று தனி அலுவலகம் ஒன்றை அமைத்து, அதில் 100 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு அளித்து, பல உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டணி சேர்க்கப்போவதாக பப்ஜி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி பப்ஜி ரசிகர்களைக் குஷி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications