ஆன்லைன் ரம்மி தடை செல்லாது- குதூகலத்தில் சூது பிரியர்கள்: அதிரடி நடவடிக்கை எடுக்கப்போகும் தமிழக அரசு!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பல்வேறு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதித்து முந்தைய அதிமுக அரசு சட்டம் போட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பார்க்கையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டதோடு இந்த விதியை ரத்து செய்தது. இதன்மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு ஆன்லைன் சூது பிரியர்கள் மீண்டும் கணக்கை தொடரத் தொடங்கினர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை
அதோடுமட்டுமின்றி மொத்தமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடியாது என குறிப்பிட்டும் உரிய விதிகளை பிறப்பித்து புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இதை கருத்தாக கொண்டு முறையான விதிமுறைகளுடன் புதிய சட்டம் கொண்டு வர தற்போதைய திமுக அரசு முடிவெடுத்துள்ளது.

விரைவில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திமுக எதிர் கட்சியாக இருந்த போதே வலியுறுத்தப்பட்டது எனவும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றம் கூறியப்படி புதிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

ஆன்லைன் சூதாட்டப்பழக்கம்
சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பதும் ஒருவகை போதைதான். ஆன்லைன் சூதாட்டப்பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வந்தது. இதனால் பல குடும்பம் பாதிக்கப்பட்டது அதுமட்டுமின்றி இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது மட்டுமில்லை சூதும் ஒருவகை போதைதான். இதில் இப்போது ஜெயித்துவிடலாம், விட்டதை பிடித்துவிடலாம் என சொத்தை இழந்தவர்கள் ஏராளம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும்
ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். அதன்படி அதிமுக அரசு நவம்பர் 21, 2020 ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார்.

தடைகளை மீறி ரம்மி விளையாடும்பட்சத்தில் அபராதம்
தடைகளை மீறி ரம்மி விளையாடும்பட்சத்தில் ரூ.5000 அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருக்கும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற அறிவிப்பால் ரம்மி தடை நீக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு விரைவில் முறையான வழிமுறைகளுடன் புதிய சட்டத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications