இந்தியாவில் 6G அறிமுகமா? 5ஜி மலிவு விலையில் கிடைக்குமா? மோடி என்ன சொல்கிறார்?
ஒட்டுமொத்த இந்தியாவும் 5ஜி (5G) சேவையை பயன்படுத்த மிகவும் ஆர்வமாகக் காத்திருக்கிறது. மக்கள் அனைவரும் 5ஜி சேவையை நோக்கி எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, இந்தியாவில் 6ஜி (6G) அறிமுகம் எப்போது வெளியாகும் என்பதைத் தெரிவிக்கும் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஜி சேவையை அறிமுகம் செய்த இந்தியா இப்போது 6ஜி அறிமுகத்திற்குத் தயாராகி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

6G அறிமுகத்திற்கு ரெடி ஆகிறதா இந்தியா?
சரி, எப்போது இந்த புதிய 5ஜி மற்றும் 6ஜி சேவை இந்தியாவில் மக்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம். சமீபத்தில் வெளியான தகவலின் படி, இன்னும் சில மாதங்களில், இந்தியா தனது 5ஜி டெலிகாம் சேவைகளைத் தொடங்க உள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 கிராண்ட் பைனலில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 6G குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் எப்போது 6ஜி அறிமுகம்?
பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த தகவலின் படி, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியாவில் 6G சேவைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறியிருக்கிறார். தெரியாதவர்களுக்கு, ஒரு தசாப்தம் என்பது 10 வருட ஆண்டை குறிக்கிறது. இந்தியாவில் 6ஜி சேவை அடுத்த 10 வருடங்களில் களமிறக்கப்படும் என்று மோடி கூறியுள்ள தகவல் எதிர்கால இந்தியாவின் திட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

5G சேவை எப்போது மக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும்?
இந்தியாவில் 5G சேவைகள் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கப்படும் என்று வதந்தி வெளியாகியது. ஆனால், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவின் குறிப்பின் படி, இந்தியாவில் 5G சேவைகள் அக்டோபரில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவையை முதலில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் Vi அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் என்ன எதிர்பார்க்கலாம்?
சமீபத்திய அறிக்கையின்படி, Smart India Hackathon 2022 இன் கிராண்ட் ஃபைனலில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பு மூலம் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த தசாப்தத்தின் இறுதியில் 6G அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், அனைத்து குறிப்பிடத்தக்க நகர்ப்புற மையங்கள் மற்றும் முக்கியமான கிராமப்புறங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி மலிவு விலையில் கிடைக்குமா?
5ஜி சேவைகள் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மலிவானதாகக் கிடைக்கும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. டெலிகாம் நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையின் வெளியீடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 5ஜி சேவைகளுக்கான அலைக்கற்றைகளை அதிகமாக ஏலத்தில் இருந்து வாங்கியுள்ளது. இதில் ஜியோ நிறுவனம் தான் கூடுதலான அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications