இந்தியாவில் 5G சேவையை துவக்கி வைக்கும் மோடி ஜி.! நாள் இது தான்.. விலை இவ்வளவு தானா?
இந்திய அரசாங்கம் இறுதியாக 5G ஸ்பெக்ட்ரம் மெகா ஏலத்தை முடித்துள்ளது. ஏலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. இந்த மாதம், அதாவது, ஆகஸ்ட் மாதமே இந்தியாவில் 5G நெட்வொர்க்கை பயன்படுத்தத் தொடங்குவோம் என்று ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை எப்போது துவங்கி வைக்கிறார்?
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி நெட்வொர்க் சேவையை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது நமக்குத் தெரியவில்லை, ஆனால், சில கணிப்பு ஊகங்களின் படி, ஜியோவின் 5ஜி சேவை ஆகஸ்ட் 15 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கைகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 29 ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 இன் தொடக்க விழாவில் 5G நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தன்று 5ஜி அறிமுகமா?
இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வழியாக இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ள அறிவிப்பின் படி, இது அக்டோபர் காலக்கெடுவுடன் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 5G நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 விழா
ஆனால், சில தாமதங்கள் காரணமாக, இந்த அறிமுகம் நிகழ்வு செப்டம்பர் மாத இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார். சமீபத்திய அறிக்கையின்படி, செப்டம்பர் 29 ஆம் தேதி இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 தொடக்க விழாவில் 5G நெட்வொர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 5ஜிக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் சுமார் 1.5 லட்சம் கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.

5ஜி சேவைக்காக ஜியோ ரூ.88,000 கோடி முதலீடா?
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ தவிர, புதிய அதானி டேட்டா நெட்வொர்க்கும் இந்த முறை ஏலத்தில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஏலத்தில் ஏறக்குறைய சுமார் ரூ.88,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதிக 5ஜி அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது. 5ஜி ஏலத்தில் மூன்றாவது இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் இருக்கிறது. இறுதி இடத்தில் அதானி குரூப்ஸ் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

எப்போது நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும்?
இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், நாட்டில் 5ஜி சேவைகள் அக்டோபர் மாதத்திற்குள் முதல் கட்டமாக தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கணிப்புகளின் படி, 5ஜி சேவையை நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஓரிரு வருடங்களில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். சில முக்கிய நகரங்களில் 5ஜி சேவை முதற் கட்டமாக அடுத்த 2 மாதங்களில் அறிமுகம் செய்யப்படும்.

ஏர்டெல் எப்போது அதன் 5ஜி சேவையை துவங்குகிறது?
ஏர்டெல் கடந்த வாரம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, 5G நெட்வொர்க்கை இந்த மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியது. இதைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பதற்கு, ஏர்டெல் நிறுவனம் Samsung, Nokia மற்றும் Ericsson உடன் கூட்டாண்மையை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலும் முடிந்த வரை இம்மாதமே அவர்களுடைய சேவையை துவங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் களமிறங்கியுள்ளனர்.

குஷியில் ஏர்டெல் பயனர்கள்.. காரணம் என்ன தெரியுமா?
இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பாரதி ஏர்டெல்லின் செய்தி அறிக்கைப் படி, சாம்சங் உடனான புதிய ஒப்பந்தம் மற்றும் நாட்டில் 5G ரேடியோ அணுகல் நெட்வொர்க்குகளுக்கான நோக்கியா மற்றும் எரிக்சனுடன் ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களுக்கு நீட்டிப்பை நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் போது, ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த மாதத்திலேயே 5G சேவைகளை ஏர்டெல் டெல்கோ இந்தியாவில் பயன்படுத்தத் தொடங்கும் என்று அவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

5ஜி சேவைக்கான கட்டணம் அதிகமாக இருக்குமா?
இந்த தகவல் ஏர்டெல் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5ஜி சேவைக்கான விலையைப் பொறுத்தவரை, இந்தியாவில் 5G சேவைகள் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கம்மியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 4G திட்டங்களைப் போலவே 5ஜி திட்டங்களின் விலை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதைப் பார்ப்பதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். 5ஜி சேவை விலை அதிகமாக இருக்குமா? அல்லது குறைவாக இருக்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முதற் கட்டமாக இந்தியாவில் எங்கெல்லாம் 5ஜி கிடைக்கும்?
இதற்கிடையில், தொலைத்தொடர்பு அமைச்சர் கூறிய தகவலின் படி, 4G சேவைகளுக்கு உலகளவில் மாதம் ரூ. 2000 செலவாகிறது என்று அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்தியாவில் 4ஜி சேவை திட்டங்களுக்கான கட்டணம் ரூ.200 விலைக்குக் குறைவான விலையில் தொடங்குகிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் 5G பேக்குகள் இதேபோன்ற விலை மாறுபாடுகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் முதல் கட்டமாக 5ஜி சேவைகள் இம்மாதம் முதல் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications