கூகுள் பே முதல் போன்பே வரை.. UPI AutoPay சேவையில் வருகிறது புதிய மாற்றம்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
நாடு முழுவதும் யுபிஐ சேவையை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. எனவே தான் யுபிஐ செயலிகளை நாடு முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் யுபிஐ சேவையில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதாவது இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை அமைப்பை நிர்வகித்து வரும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.

அதன்படி பயனர்கள் இனி தங்களது போன்பே, கூகுள் பே போன்ற டிஜிட்டல் கட்டண செயலிகளில் வைத்துள்ள ஓடிடி சந்தாக்கள், எஸ்பிஐ முதலீடுகள், கடன் தவணைகள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்களுக்கான யுபிஐ ஆட்டோபே (UPI AutoPay) கட்டளைகளை ரத்து செய்யாமலேயே, வேறு செயலிகளுக்கு எளிதாகப் போர்ட் செய்து மாற்றிக் கொள்ள முடியும்.
ஆகவே இதன் மூலம் OTT தளங்களுக்கான சந்தாக்கள், SIP முதலீடுகள், காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் கடன் தவணைகள் போன்ற வழக்கமான கட்டணங்களை நிர்வகிப்பது பயனர்களுக்கு எளிதாகும். ஒரு UPI செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாறும்போது, தற்போதுள்ள யுபிஐ ஆட்டோபே சேவையை இழக்காமல் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதால், பயனர்களின் சிரமமும் கூடுதல் நடைமுறைகளும் குறையும்.
தற்போது பயனர்கள் ஒரு செயலியில் இயங்கும் ஆட்டோபே சேவையை நிறுத்த வேண்டும் என்றால், செயலியில் உள்ள ஆட்டோபே கட்டளையை முழுமையாக ரத்து செய்துவிட்டு, புதிய செயலியில் மீண்டும் முதலில் இருந்து பதிவு செய்ய வேண்டும். ஆனால் NPCI அமைப்பு கொண்டுவர உள்ள புதிய மாற்றத்தின் மூலம் ஆட்டோபே கட்டளையை ரத்து செயய் வேண்டி அவசியமில்லை. இந்த புதிய வசதியானது பயனர்கள் விரும்பும் யுபிஐ செயலிகள் வழியே போர்ட் செய்து தகுதியான ஆட்டோபே சேவைகளை எளிதாக அணுகவும் நிர்வகிக்கவும் வழிவகுக்கும்.
அதேபோல் புதிய மாற்றங்களின் பலன் பயனர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், வணிகர்களுக்கும் கிடைக்க உள்ளது. இதன்படி, வணிக நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள UPI AutoPay கட்டளைகளை ஒரு payment gateway-யிலிருந்து மற்றொரு gateway-க்கோ அல்லது வேறு வங்கிக்கோ மாற்றிக்கொள்ளும் வசதி பெறவுள்ளன. மேலும் இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் ஆட்டோபே சேவையை மீண்டும் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இது வணிகர்களின் கட்டண விநியோக முறையை மேலும் திறம்பட செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் செப்டம்பர் 8 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள குளோபல் ஃபின்டெக் விழா 2026-ல், UPI AutoPay (யுபிஐ ஆட்டோபே ) தொடர்பான புதிய வசதிகளை NPCI அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் ஆட்டோபே சேவைகளை வேறு ஆப்பிற்கு மாற்றினாலும், பயனரின் அசல் வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே பணம் தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும். மேலும் இந்த புதிய அம்சம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications