கூகுள் பே, போன்பே செயலிகளுக்கு இப்படியொரு நிலைமையா? UPI-ல் புதிய சகாப்தம்!
இந்தியாவில் கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ செயலிகளைப் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் விரைவாகப் பணம் செலுத்த முடிகிறது. எனவே தான் இந்த யுபிஐ செயலிகளை தற்போது அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) குறித்த ஒரு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது நாட்டில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் முன்னிலை வகித்து வரும் போன்பே மற்றும் கூகுள் பே செயலிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த பங்கு, முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க சதவீத அளவுக்குக் கீழ் சரிந்துள்ளதாகத் தேசிய கட்டணக் கழகமான என்.பி.சி.ஐ. வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் யுபிஐ பரிவர்த்தனைகளில் போன்பே, கூகுள் பே ஆகிய இரண்டு முன்னணி செயலிகள் வாயிலாக நடந்த பரிவர்த்தனை முதன்முறையாக 80 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளதாக என்.பி.சி.ஐ தரவுகள் தெரிவிக்கின்றன.
என்.பி.சி.ஐ. வெளியிட்ட தரவுகளின்படி, 2026 மே மாதத்தில் நடைபெற்ற யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் போன்பே 46.20 சதவீதத்தையும் கூகுள் பே 32.70 சதவீதத்தையும் பெற்றுள்ளன. ஆகவே இரண்டையும் சேர்த்தால் மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் 79 சதவீதம் தான்.
கடந்த 2024 மே மாதத்தில், போன்பே மற்றும் கூகுள் பே ஆகிய இரு செயலிகளும் சேர்ந்து 86 சதவீத யுபிஐ பரிவத்தனைகளைக் கொண்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் 79 சதவீதமாகக் குறைந்துள்ளன.
குறிப்பாக பேடிஎம், நவி, சூப்பர் மணி, பீம் போன்ற செயலிகள் வாயிலாக நடக்கும் பரிவர்த்தனைகள் மெதுவாக அதிகரித்து வருகின்றன. அதுவும் நவி செயலி வாயிலாக நடந்த பரிவர்த்தனைகள் 2024 மே மாதத்தில் 0.21 சதவீதமாக இருந்தன. ஆனால் தற்போது நவி செயலி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் உயர்ந்துள்ளன.
அதேபோல் ஒரே யுபிஐ செயலி 30 சதவீதத்துக்கு மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்ற விதி அமலுக்கு வர உள்ளது. அதற்கு முன்பே போன்பே, கூகுள் பே பயன்பாடு குறைந்து மற்ற செயலிகள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி இருப்பது யுபிஐ பரிவர்த்தனைகள் பரவலாகி வருவதைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிகள்
மேலும் சமீபத்தில் யுபிஐ செயலிகளில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. அதாவது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படுவதைத் தடுக்க, தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ (UPI) செயிலிகள் மூலம் பணம் அனுப்பும் முன், பெறுநரின் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயர் பயனர்களுக்குத் தெளிவாகக் காட்டப்படும். இந்த நடவடிக்கை, போலி OR குறியீடுகள் மற்றும் தவறான கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படும் சம்பவங்களைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதியை செயல்படுத்துவதன் மூலம், யுபிஐ பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஆன்லைன் பண மோசடிகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி பெயர்கள் அல்லது தவறான வணிகப் பெயர்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெறுநரின் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயரைக் காட்டும் இந்த நடைமுறை, பயனர்கள் பணம் அனுப்பும் முன் கூடுதல் கவனத்துடன் செயல்பட உதவும் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications