தீபாவளிக்கு சர்ப்ரைஸ் தருமா EPFO? ATM மூலம் PF பணத்தை எடுக்கும் வசதி.. வெளியானது முக்கிய தகவல்..
இ.பி.எப்.ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அவ்வப்போது கொண்டுவரும் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறிய தொகை பிடித்தம் செய்யப்படும். அதே தொகை நிறுவனம் தரப்பிலும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதுதவிர பிஎஃப் தொகைக்கு அரசு தரப்பிலும் வட்டி வருமானமும் வழங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் பிஎஃப் திட்டம் ஒரு அற்புதமான திட்டமாக இருக்கிறது.
குறிப்பாக நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் (ATM) எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று வருங்கால வைப்பு நிதி கணக்கை யுபிஐ எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 10, 11-ம் தேதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம் கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஆகவே தீபாவளி பண்டிகை பரிசாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அதுவும் EPFO 3.0 திட்டத்தின் மிக முக்கியமான வசதி தான் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி. இதற்கு பிஃஎப் உறுப்பினர்கள் தங்களது UAN எண்ணைச் செயல்படுத்த வேண்டும். பின்பு ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் சில அவசர தேவைக்கு ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.
அதேபோல் டிஜிட்டல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தான் யூபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் இதன் மூலம் பிஎஃப் ஊழியர்கள் உடனடியாக பணத்தை எடுக்கலாம். இந்த திட்டத்தில் சிறப்பான டிஜிட்டல் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO 3.0 திட்டம் மூலம் உங்கள் பிஎஃப் கணக்கில் எதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது கணக்கு நிலையைத் தெரிந்து கொள்ள விரும்பினாலோ பிஎஃப் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. ஓடிபி மூலம் ஆன்லைனிலேயே திருத்தங்கள் செய்ய முடியும். பின்பு கணக்கு நிலையையும் எளிதாகக் கண்காணிக்கலாம். இதுதவிர பிஎஃப் உறுப்பினர் இறந்துவிட்டால் கிளைம் செட்டில்மென்ட் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
EPFO 3.0 திட்டத்தில் ஊழியர்களின் இறப்பு தொடர்பான கிளைம்களை எளிதாக்கியது ஒரு நல்ல விஷயம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் EPFO 3.0 மூலம் பிஎஃப் உறுப்பினர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் பிஎஃப் சேவைகளை வேகமாகவும், எளிதாகவும் ஆக்கும் என்பது கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications