PF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது வசதி.. இனி பணம் எடுப்பது சுலபம்.. இதோ முழு விவரம்..
இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) வரும் ஏப்ரல் முதல் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது பிஎப் (PF) பயனர்கள் பணத்தை மிக எளிதாகவும் வேகமாகவும் எடுக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது இபிஎப்ஓ அமைப்பு.
தற்பேது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதில் உள்ள ஆவணங்கள் மற்றும் காரணங்கள் போன்ற அனைத்தையும் சரிபார்த்து உங்களுக்குப் பணம் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவினை எடுப்பார்கள்.

ஆனால் இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது. அதாவது விரைவில் பிஎப் பணத்தை யுபிஐ வழியாக எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி கொண்டுவரப்பட உள்ளதாக இபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி 2026 ஏப்ரல் மாதத்தில் பிஎப் சந்தாதாரர்கள் தங்களது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ பேமென்ட் கேட்வே வழியாக பெற்றுக் கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய மாற்றம்
முன்பு கூறியது போல் பிஎப் பணம் எடுக்க தற்போது பல படிவங்களை (Forms) நிரப்ப வேண்டியுள்ளது. ஆனால் இனி UPI பின் (PIN) பயன்படுத்தி, மிகக் குறைந்த ஆவணங்களுடன் நொடிகளில் பணத்தைப் பெற முடியும். அதேசமயம் தொடக்கத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.25000 வரை எடுக்க அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
குறிப்பாக புதிய விதிமுறையின்படி, எல்லா வகையான தேவைகளுக்கும் வெறும் 12 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு வேலை பார்த்திருந்தாலே போதும் பிஎப் பணம் எடுக்க முடியும். குறிப்பாக ஊழியரின் பங்களிப்பு மட்டுமின்றி நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் வட்டி என மொத்த தொகையில் 75 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்.
ஒருவர் 12 மாதங்கள் வேலையை முடித்த பிறகு மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், இதர அவசரத் தேவைகள் போன்ற காரணங்களுக்காகத் தகுதியான தொகையில் 100 சதவீதம் வரை எடுக்க அனுமதி உண்டு.
அதேபோல் ஊழியர்கள் முழுப்பணத்தையும் எடுத்துவிட்டால், ஓய்வுக்காலத்தில் கையில் பணம் இருக்காது என்பதால் பாதுகாப்பிற்காக 25 சதவீதம் தொகையை EPFO அமைப்பு கணக்கிலேயே வைத்திருக்கும். குறிப்பாக பிஎப் கணக்கிற்கு வழங்கப்படும் 8.25 சதவீதம் வட்டி மூலம் உங்கள் பணம் வளர வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

அதேசமயம் வேலை இழந்தவுடன் மொத்த இருப்பில் 75 சதவீதம் உடனே எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 25 சதவீதம் தொகையை ஒருவருடம் கழித்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 55 வயதிற்குப் பின்பு ஓய்வு பெறுபவர்கள் உடல் ஊனம் அல்லது நிரந்தரமாக வெளிநாடு செல்பவர்கள் 100 சதவீதம் பணத்தையும் முழுமையாக எடுக்க எந்த தடையுமில்லை.
பிஎப் புதிய விதிகள் உங்கள் பென்ஷன் (EPS) திட்டத்தைப் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 10 ஆண்டுகள் பணி முடித்தால்தான் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். அவசரப்பட்டு பென்ஷன் பணத்தை முன்கூட்டியே எடுத்தால், பிற்காலத்தில் கிடைக்க வேண்டி பலன்கள் இழக்க நேரிடும்.


Click it and Unblock the Notifications








