PF பணம் தாமதம் செய்த EPFO.. இனி வட்டியுடன் செலுத்த வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு..
EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த உத்தரவு மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களுக்குச் சாதகமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் தனது பிஎஃப் (PF) தொகையைப் பெறுவதற்காக அளித்த விண்ணப்பத்தை 35 நாட்கள் தாமதமாக நிறைவேற்றிய விவகாரத்தில், EPFO அமைப்புக்கு நுகர்வோர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு இழப்பீடு வழங்கும் வகையில், நிலுவைத் தொகையை 6 சதவீத ஆண்டு வட்டியுடன் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஃப்ளீட் மேரிடைம் சர்வீசஸ் (Fleet Maritime Services) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர், தனது பிஎஃப் கணக்கில் சேமிக்கப்பட்டிருந்த ரூ.14,06,272 தொகையைப் பெறுவதற்காக 2016 அக்டோபர் 19ஆம் தேதி ஈபிஎஃப்ஓ அலுவலகத்தில் கோரிக்கை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
குறிப்பாக ஈபிஎஃப் திட்டம், 1952-ன் விதிமுறைகளின்படி, உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் பிஎஃப் கோரிக்கைகள் 20 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான தொகை வழங்கப்பட வேண்டும். இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கை தீர்வு செய்யப்பட வேண்டியிருந்தது.
ஆனால், அந்த ஊழியரின் பிஎஃப் பணம் 2016 டிசம்பர் 14ஆம் தேதியன்றுதான் வழங்கப்பட்டது. விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட கால அவகாசத்தைக் கடந்தும் பணம் வழங்கப்பட்டதாகக் கூறி, ஏற்பட்ட தாமதத்திற்கு எதிராக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கில், பிஎஃப் கோரிக்கை மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய கூட்டுப் பிரகடனம் இணைக்கப்படாததால், அந்த விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டதாக ஈபிஎஃப்ஓ தெரிவித்தது. பின்னர், முழுமையான ஆவணங்களுடன் ஊழியர் மீண்டும் விண்ணப்பித்ததாகவும், அந்த ஆவணங்கள் தங்களுக்கு 2016 டிசம்பர் 2ஆம் தேதிதான் கிடைத்ததாகவும் ஈபிஎஃப்ஓ தரப்பில் வாதிடப்பட்டது.
முழுமையான ஆவணங்கள் கிடைத்த பிறகு, விதிமுறைகளின்படி 20 நாட்களுக்குள், அதாவது டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பிஎஃப் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தொகை வழங்கப்பட்டுவிட்டதாக ஈபிஎஃப்ஓ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், ஈபிஎஃப்ஓ முன்வைத்த இந்த காரணத்தை மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஏற்காமல், அதன் வாதத்தை முற்றிலும் நிராகரித்தது.
அதுவும் அக்டோபர் 19-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தில் முழுமையான ஆவணங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு எழுத்துப்பூர்வமான நிராகரிப்பு கடிதத்தையோ அல்லது தகவலையோ ஊழியருக்கு அனுப்பியதற்கான சான்றுகளை ஈபிஎஃப்ஓ அமைப்பால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை. ஆகவே ஈபிஎஃப்ஓ தனது கடமையிலிருந்து தவறிவிட்டதுடன், உரிய காலத்தில் கோரிக்கையைப் பரிசீலிக்கத் தவறியது சேவையில் உள்ள குறைபாடு என்று நீதிமன்றம் கண்டித்தது.
இதைத் தொடர்ந்து ஊழியருக்கு வழங்க வேண்டிய ரூ.14,06,272 பிஎஃப் தொகையை, ஏற்பட்ட 35 நாள் தாமதத்திற்கான 6 சதவீத ஆண்டு வட்டியுடன் சேர்த்து வழங்குமாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஈபிஎஃப்ஓ அமைப்புக்கு 45 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு கிடைக்கும் பிஎஃப் சேமிப்புத் தொகை, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான முக்கியமான நிதி ஆதாரமாக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்தத் தொகையை வழங்குவதில் ஏற்படும் தேவையற்ற தாமதம், தங்களின் சேமிப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையையும் பல்வேறு சிரமங்களையும் ஏற்படுத்தும் என்றும் தீர்ப்பில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பு பிஎஃப் சந்தாதாரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சரியான ஆவணங்களை சமர்ப்பித்தும் பிஎஃப் கிளைம் தாமதமானால், நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி நிவாரணம் பெறலாம் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications
