தமிழக அரசு அதிரடி: இனி பேருந்துகளில் Paytm மூலம் டிக்கெட்., சில்லரை இல்லனு பேச்சுக்கே இடமில்ல!
அரசு பேருந்துகளில் பேடிஎம் மூலம் டிக்கெட் எடுக்கும் முறைக்கான சோதனை கட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகம் முழுவதும் 4-வது கட்ட ஊரடங்கு முடிவடைந்து 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் பல்வேறு தளர்வுகள் மத்திய மாநில் அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத பேருந்துகளை தொடங்க அனுமதி
தமிழகத்தை பொருத்தவரை அனைத்து மாவட்டங்களும் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூகஇடைவெளியை பின்பற்றும் விதமாக இருக்கை
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர்த்து பிற மாவட்டங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 50% பேருந்துகள் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சமூகஇடைவெளியை பின்பற்றும் விதமாக ஒரு பேருந்திற்கு 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை
பேருந்துகள் முறையாக கழுவப்பட்டுள்ளது பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் மூலம் கட்டணம் வசூல்
அதேபோல் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பயணிகளிடம் முடிந்தவரை மின்னணு கட்டணம் மூலம் டிக்கெட் வசூலிக்கும் முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். இதன் முதல்கட்ட சோதனையாக அரசு பேருந்துகளில் பேடிஎம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

க்யூஆர் கோட் வைக்கப்பட்டிருக்கும்
அரசு பேருந்துகளில் பேடிஎம் மூலம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் முறை படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்துகளில் க்யூஆர் கோட் வைக்கப்பட்டிருக்கும் இதை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது. அப்படி செலுத்தப்படும் கட்டணம் நேரடியாக போக்குவரத்துத்துறை வங்கி கணக்கிற்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








