உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..
ஏலியன் விண்கலங்களைப் பூமியில் பார்த்ததாகவும், ஏலியன் பறக்கும் தட்டை கண்டோம் என்று பல செய்திகள் ஆங்காங்கே பரவி வருகிறது. ஆனால், இது எல்லாம் நம்பக் கூடிய விஷயமே இல்லை, இது ஒரு புரளி, கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ, நன்றாக உற்று பாருங்கள் இது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று மெத்தனம் கட்டியவர்களுக்கு இந்த செய்தி நிச்சயமாக அவர்களின் வாய்க்கு ஒரு பெரிய சைஸ் பூட்டை பூட்டிவிட்டது.

பென்டகன் ஒப்புக்கொண்ட ஆதார UFO நிகழ்வு
காரணம், அப்படியான ஒரு UFO நிகழ்வை ஆதாரத்துடன் வீடியோ பிடித்து வெளியிட்ட ஒரு நேவி கடற்படை வீரரின் வீடியோ பதிவு உண்மையானது தான் என்று பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது. இவர் படம்பிடித்த வீடியோவில் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் வானத்தில் முக்கோண வடிவத்தில் பறந்து மறைந்துள்ளது. பென்டகன் என்ன சொன்னது? என்ன தகவல்களை வெளி உலகத்துடன் பகிர்ந்துகொண்டது என்று தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து இறுதி வரை படியுங்கள்.

"அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள்"
கடந்த 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட "அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள்" (UAP) கசிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ முறையானது தான் என்றும், இந்த வீடியோ கடற்படை வீரர்களால் எடுக்கப்பட்டவை என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை பென்டகன் உறுதிப்படுத்தி உண்மையை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தி ஒப்புக்கொண்டுள்ளது. முக்கோண வடிவிலான அடையாளம் தெரியாத மர்ம பொருள், ஒளிரும் தன்மையுடன் மேகங்களின் வழியாக நகரும் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் கசிந்து வைரல் ஆகியது.
தீவிர விசாரணைக்குப் பின்னர் தகவல்
அப்போது, இது தொடர்பான உண்மையை விளக்கமளிக்க பென்டகன் மறுத்தது. தீவிர விசாரணைக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்த வீடியோ அமெரிக்க கடற்படை வீரர்களால் எடுக்கப்பட்டது என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சூ கோஃப் பத்திரிகையாளர்களிடம் தற்பொழுது தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத மூன்று பொருட்கள்
அதேபோல், இதற்கு முன்பு "ஸ்பியர்", "ஏக்கோர்ன்" மற்றும் "மெட்டாலிக் பிளிம்ப்" என வகைப்படுத்தப்பட்ட அடையாளம் தெரியாத மூன்று பொருட்களின் படங்களும், வீடியோக்களும் கடற்படை வீரர்களால் எடுக்கப்பட்டன என்பதையும் கோஃப் இந்த நேரத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பென்டகனில் இருந்து இப்படி ஒரு உறுதிப்படுத்தும் தகவல் வெளியானது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. அப்படியானால், ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்கின்றனவா? என்ற கேள்விக்கான உறுதியான அதிகாரப்பூர்வ பதில் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.
கூடுதல் தகவலை வெளியிட மாட்டோம்
இது போன்ற கேள்விகளுக்கும், இந்த அடையாளம் தெரியாத மர்ம பொருட்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் அல்லது பரிசோதனைகள் குறித்துப் பாதுகாப்புத் துறை மேலும் எந்தவித கருத்தையும் தெரிவிக்காது என்று அவர் கூறினார். "செயல்பாட்டு பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும், சாத்தியமான எதிரிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதற்கும், ஆரம்பத்தில் யுஏபி என நியமிக்கப்பட்ட ஊடுருவல்கள் உட்பட, எங்கள் பயிற்சி வரம்புகள் பற்றிய தகவல்களை வெளியிட மாட்டோம்" என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யுஎஃப்ஒ பார்வைகளை விசாரிக்கக் யுஏபி பணிக்குழு
அதேபோல், நியமிக்கப்பட்ட வான்வெளியில் ஏற்படும் அவதானிப்புகள் அல்லது அறிக்கையிடப்பட்ட ஊடுருவல்களின் விவரங்களை DoD பகிரங்கமாக விவாதிக்க விரும்பாது என்றும், அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வு பணிக்குழு "இந்த சம்பவங்களை அவற்றின் தற்போதைய தேர்வுகளில் சேர்த்துள்ளது" என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அமெரிக்க இராணுவத்தால் கவனிக்கப்பட்ட யுஎஃப்ஒ பார்வைகளை விசாரிக்கக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் யுஏபி பணிக்குழு உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ங்கீகரிக்கப்படாத மற்றும் அடையாளம் தெரியாத விமானங்கள்
"சமீபத்திய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்படாத மற்றும் அடையாளம் தெரியாத விமானங்கள் பல்வேறு இராணுவ கட்டுப்பாட்டு எல்லைகள் மற்றும் நியமிக்கப்பட்ட வான்வெளியில் நுழைந்ததாகப் பல தகவல்கள் வெளி வந்துள்ளன" என்று அமெரிக்க கடற்படை 2019 ஆண்டில் தெரிவித்திருந்தது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 2004 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட யுஏபிகளின் மூன்று வீடியோக்களை பென்டகன் வெளியிட்டது.

இனி இது எல்லாம் பொய் என்று சொல்ல முடியாது
படம்பிடித்த விமானிகள் அந்த பொருட்களைக் கண்டு வியப்படைந்தனர், வீடியோவை பார்வையிட்ட பார்வையாளர்களும் வியப்படைந்தனர் என்பதே உண்மை. இந்த அடையாளம் தெரியாத பொருட்கள் எங்கிருந்து வருகிறது? இவற்றை எப்படி நாம் அடையாளம் காண போகிறோம் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால், இனி அடையாளம் தெரியாத மர்ம பொருட்களை வானில் பார்த்தோம் என்று யாரும் சொன்னால், அதை பொய் என்று கூறாமல், உண்மையாக இருக்கலாம் என்று நம்பும் அளவிற்கு, மனிதர்களின் மனநிலை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications