10 வருட கனவு சார்.. AI உதவியால் நடந்த கால்கள்.. பக்கவாதத்தில் இருந்து மீண்ட வாழ்க்கை!
பக்கவாதத்தால் (Paralyse) பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக நடக்க முடியமால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று விரக்தியடைந்த மனதுடன் நாட்களை கடத்திவந்த ஒருவரது வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மீண்டும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இதுபோன்று பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு உத்வேகம் கிடைத்துள்ளது.
இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 21ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. வேறெந்த தொழில்நுட்பமும் அடைந்துவிடாத உயரத்தை செயற்கை நுண்ணறிவு அடைய காத்திருக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு, மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிமையாக மாற்றி வருகிறது.

மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி லாபம் பார்க்க தொடங்கிவிட்டன. ஒருபுறம், ஏஐ (AI) வருகை காரணமாக மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இதுவரை செய்ய முடியாத பல காரியங்களை ஏஐ செய்து காட்டி வருகிறது. இப்போது, முதுகு தண்டுவட பாதிப்பால் கால்கள் முடங்கிய ஒருவரை 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்க வைத்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கெர்ட் ஜான் ஒஸ்காம் (Gert Jan Oskam) என்பவருக்கு 2011ஆம் ஆண்டு நடந்த பைக் விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. அன்றாட வாழ்க்கையை நடத்தவே அவருக்கு மிகுந்த வேதனையாக இருந்துள்ளது. பல முறை வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று தற்கொலைக்கு அவர் முயற்சித்துள்ளார்.
இப்படி 10 ஆண்டுகளாக நரக வேதனையில் இருந்துவந்துள்ளார். இந்த நேரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டிஜிட்டல் பிரிட்ஜ் (Digital Bridge) என்னும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொண்டார். இந்த நிறுவனம் முதுகு தண்டவட செயல்பாட்டை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. அதாவது, ஒருவர் நடக்க வேண்டும் என்று மூளையில் நினைத்தால், அந்த உத்தரவு முதுகு தண்டுவடம் வழியாக கால் தசைகளுக்கு செல்லும்.
அதன்படி அவர் நடக்க ஆரம்பிப்பார். ஆனால், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டால், கால் தசைகளுக்கு மூளையில் இருந்து உத்தரவு செல்லாது. இதனால் கால்கள் செயல்பாடின்றி கிடக்கும். இதேபோல, முதுகு தண்டுவட பாதிப்பால் உடலில் செயல்படாமல் இருக்கும் பாகங்களுக்கு மூளையின் உத்தரவுகளை கொண்டு சேர்க்க செயற்கை நுண்ணறிவு சிப்பை பயன்படுத்துவதே டிஜிட்டல் பிரிட்ஜ் நிறுவனத்தின் நோக்கமாகும்.
இதன்படியே கெர்ட் ஜான் ஒஸ்காமின், முதுகு தண்டுவடத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் சென்சார்களை பொருத்தி கணினியையும், அந்த சென்சார்களையும் டிஜிட்டல் பிரிட்ஜ் குழுவினர் இணைத்துள்ளனர். இந்த கணினியை கெர்ட் ஜான் ஒஸ்காம் தனக்கு அருகில் வைத்து கொண்டு, அதில் நடக்க வேண்டும் என்று அவர் கமெண்ட் செய்தால், அவரது கால்கள் செயல்பட தொடங்கின. இருப்பினும், மூளையை போல் நினைத்த உடன் நடக்கவும், நிற்கவும் கணினி மூலம் செயல்படுத்த அவரால் முடியவில்லை.
இதனால் அந்த குழுவினர் அவரது மூளையிலேயே செயற்கை நுண்ணறிவு சிப்பை பொருத்தி, அதன் மூலம் முதுகு தண்டுவடத்திற்கு உத்தரவிடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த வாரத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளையில் சிப் பொருத்தப்பட்டது. இப்போது, இந்த சிப் வேலை செய்கிறது. இதற்கான பயிற்சியில் கெர்ட் ஜான் ஒஸ்காம் ஈடுபட்டுள்ளார்.
நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து கெர்ட் ஜான் ஒஸ்காம் கூறுகையில், "10 ஆண்டுகளுக்கு பின் என்னால் நடக்க முடிந்ததை நினைத்தால் கண்கலங்குகிறது. இந்த உணர்வை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எனது நண்பர்கள் உடன் மீண்டும் நடந்து சென்றது கனவுபோல இருந்தது. எனது மூளையில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சிப், நான் நினைப்பதை வயர்லெஸ் சிக்னல்களாக முதுகு தண்டுவடத்திற்கு அனுப்பி தசைகளை செயல்பட வைக்கிறது" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








