புது PAN கார்டு ரூல்ஸ்.. இனி ரூ.50000 லிமிட் க்ளோஸ்.. பேங்க் அக்கவுண்டுக்கு வந்தது லிமிட்!
இந்தியாவில் வருமான வரி விதிகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிய வருமான வரி விதிகள் (Income Tax Rules 2026) மூலம் பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) பயன்படுத்த வேண்டிய பரிவர்த்தனைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில பரிவர்த்தனைகளில் பான் காட்டும் கட்டாயம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சில பெரிய நிதி பரிவர்த்தனைகளில் விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேங்க் கஸ்டமர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

முன்பு ஒரே நாளில் ரூ.50,000 தொகையை தாண்டி வங்கியில் பணம் செலுத்தினால் பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் ரொக்கமாக பணத்தை செலுத்தினால் மட்டுமே பான் கார்டு விவரங்கள் தேவைப்படும்.
சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை தொடர்பான விதிகளிலும் பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்பு ரூ.10 லட்சத்தை தாண்டிய சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு விவரங்கள் அவசியமாக இருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான சொத்து பரிவர்த்தனைகளில் பான் கார்டு விவரங்கள் கட்டாயமாகும்.
பரிசாக (Gift Deed) சொத்து மாற்றம் அல்லது ஜேடிஏ (JDA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் (Joint Development Agreement) போன்ற ஒப்பந்தங்களும் இந்த வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணம் மற்றும் வெளிநாட்டு கரென்சியை வாங்குதல் தொடர்பாக தனியாக பான் கார்டு விவரங்களை காட்ட வேண்டிய பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரே பரிவர்த்தனையில் ரூ.2 லட்சத்தை தாண்டும் செலவுகள் செய்தால் அவை பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகள் வாங்கும் பிரிவின் கீழ் கண்காணிக்கப்படலாம். காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அதிக மதிப்புள்ள பிரீமியங்களும் தற்போது வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வருகின்றன.
பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால் அந்த தகவல் அறிக்கையிடப்படும். பான் இல்லாதவர்களுக்கு இந்த வரம்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல், விருந்தினர் மாளிகை, கன்வென்ஷன் சென்டர் மற்றும் நிகழ்ச்சி நிர்வாக நிறுவனங்களுக்கு ரொக்கமாக பணம் செலுத்தும் வரம்பும் மாற்றப்பட்டுள்ளது.
முன்பு ரூ.50,000 தொகையை தாண்டினால் பான் காடு விவரங்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வாகன வாங்குதலிலும் புதிய விதிகள் அமலாகியுள்ளன. ரூ.5 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களுக்கு பான் கார்டு விவரங்கள் அவசியமாகும். இந்த விதியில் தற்போது இருசக்கர வாகனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் டிராக்டர்கள் இந்த வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. மேலும், பான் இல்லாதவர்கள் பயன்படுத்தி வந்த படிவம் 60 (Form 60) ஆனது தற்போது நீக்கப்பட்டு அதற்கு பதிலாக படிவம் 97 (Form 97) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான சொத்து பரிவர்த்தனைகளில் படிவம் 97 ஏற்கப்படாது. பான் கார்டு கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த புதிய விதிகள் சிறிய பரிவர்த்தனைகளில் பொதுமக்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதோடு, பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து ஒப்பந்தங்களை வருமான வரித்துறை மிக நெருக்கமாக கண்காணிக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். PAN தொடர்பான இந்த மாற்றங்கள் 2026-ல் வரி நிர்வாகத்தை மேலும் வெளிப்படையாக மாற்றும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications