பான் கார்டு விஷயத்தில் நடக்கும் புதிய மோசடி.. இந்த லிங்கை க்ளிக் செய்யாதீங்க.. உஷார்..
இந்தியாவில் ஆதார் கார்டை போலவே பான் கார்டும் (PAN Card) மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக அரசாங்க சலுகைகளைப் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. அதுவும் மிக முக்கியமாக, வருமான வரி விஷயத்தில் பான் கார்டுதான் முதன்மையான ஆவணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்தியாவில் பான் கார்டு தொடர்பான மோசடிகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகமான அளவில் நடைபெறுகின்றன என்றே கூறலாம். குறிப்பாக மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் மக்களை சிக்க வைத்து அவர்களின் பான் கார்டு விவரங்களைப் பெற முயற்சி செய்கின்றனர். இது போன்ற ஒரு புதிய மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank) வாடிக்கையாளர்களுக்கு பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்காததால் 24 மணி நேரத்துக்குள் அவர்களின் வங்கி கணக்குள் முடக்கப்படும் என்று கூறி மோசடி செய்பவர்கள் செய்திகளை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக இந்த செய்தியில் ஒரு இணைப்பு (லிங்க்) உள்ளது அதை கிளிக் மட்டும் செய்தால் உங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.
குறிப்பாக இந்த விஷயத்தில் கவனமாக இருக்குமாறு பிஐபி எச்சரித்துள்ளது. மேலும் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) இந்த செய்திகளை போலியானது என்று கூறியுள்ளது. அதேபோல் இந்தியா போஸ்ட் இது போன்ற செய்திகளை அனுப்புவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. பின்பு இதுபோன்ற தெரியாத இணைப்பை கிளிக் செய்வதையோ அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து எகஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் PAN விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால், IPPB கணக்குகள் 24 மணி நேரத்திற்குள் தடுக்கப்படும் என்று மெசேஜ் வருகிறது. இது முற்றிலும் தவறானது. மேலும் இந்தியா போஸ்ட் ஒருபோதும் அத்தகைய செய்திகளை அனுப்பாது என்று கூறியுள்ளது. குறிப்பாக இவ்வாறு மோசடி செய்பவர்கள் ஃபிஷிங்கைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஸ்கேமர்கள் கடவுச்சொல், வங்கி விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடி ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு தெரியாத இடத்தில் இருந்து வரும் மின்னஞ்சல் அல்லது செய்தியில் இருக்கும் இணைப்பை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். அவற்றை கிளிக் செய்வதற்கு முன்பு இணைப்பு எங்கு செல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதேபோல் எந்த அவசர செய்தி அல்லது மின்னஞ்சலுக்கும் உடனடியாக பதிலளிக்க வேண்டாம். குறிப்பாக இது ஒரு மோசடியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதேபோல் கடந்த மாதம் பெங்களூருவில் (Bengaluru) நடந்த டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் (software engineer) ரூ.11.8 கோடியை இழந்துள்ளார். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியருக்கு 2024 நவம்பர் 11-ம் தேதி அழைப்பு வந்துள்ளது.
ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களது சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் துன்புறுத்தல் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் அந்த அழைப்பில் கூறியுள்ளனர். அதுவும் மும்பையின் கொலாபா சைபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உங்களை டிஜிட்டல் கைது (digital arrest) செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், நேரில் வந்து கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று போனில் அழைத்தவர் பயம் காட்டியுள்ளார்.
அதை தொடர்ந்து இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கும்படியும் எச்சரித்துள்ளனர். மேலும் ஸ்கைப் செயலி (Skype app) பதிவிறக்கம் செய்யச் சொல்லிப் பேசியுள்ளனர். வீடியோ அழைப்பில் பேசிய அந்த நபர் போலீஸ் சீருடையில் இருந்துள்ளார். அவர், சாப்ட்வேர் இன்ஜினியரிடம் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்று கூறியுள்ளார், போலீஸ் சீருடையில் இருந்த இன்னொருவர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேட்டகத்தவறினால் உங்கள் மொத்த குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.

மேலும் இதைக் கேட்டதும் சாப்ட்வேர் இன்ஜினியர் பதறிப்போனார். உடனே அவர் கூறியபடி எல்லாம் செய்துள்ளார். அதாவது கைது அச்சத்தில், அவர்கள் கூறியபடி, பல பரிவர்த்தனைகளில் ரூ.11.8 கோடியை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். குறிப்பாக ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பிய பிறகும், மீண்டும் கேட்பதை அந்த நபர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதனால் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்ட அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு போலீஸ் விசாரணையில், அவர் மோசடி கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்ததற்காகத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி.என்.எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பெங்களூரு போலீசார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








