இன்னும் பான்-ஆதார் இணைக்காதவர்களுக்கு என்ன நடக்கும்? இந்த காலத்திற்குள் இணைத்தால் அபராதம் குறைவு..
ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இறுதி காலக்கெடுவைச் சந்திக்கத் தவறினால் பான் அட்டை செயலிழக்கப்படும், மீண்டும் சேவையைப் பெறுவதற்குப் பயனர்கள் தாமதக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உங்கள் பெர்மனெண்ட் அக்கவுண்ட் நம்பரை (Permanent Account Number), அதாவது பான் (PAN) நம்பரை ஆதாருடன் இணைப்பதற்கான இறுதி காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது.

இனி அபராதம் செலுத்தி தான் ஆதார் - பான் இணைக்க வேண்டுமா?
இனி, நீங்கள் உங்கள் பான் விபரத்தை ஆதார் கணக்குடன் இணைப்பதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அரசாங்கம் விதித்த இறுதி காலக்கெடுவைத் தவறவிட்ட காரணத்தினால், உங்களுடைய பான் அட்டை செயலிழந்து போகலாம் மற்றும் அதை புதுப்பிக்க நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான முந்தைய காலக்கெடு செப்டம்பர் 30, 2021 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில பயனர்கள் ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லை
பின்னர், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்த காலக்கெடுவை மார்ச் 31, 2022 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது. இருப்பினும், இன்னும் சில பான் அட்டை பயனர்கள் அவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை ஆதார் விவரத்துடன் இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி, வழங்கப்பட நேரத்தில் பான் அட்டையை இணைக்கத் தவறிய பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஒரு குறிப்பிட்ட தொகையிலான அபராதத்தைச் செலுத்தி, உங்கள் ஆதார்-பான் எண்ணை இணைக்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதனால் என்ன சிக்கல்கள் உருவாகும்?
அதேபோல், உங்கள் ஆதார் மற்றும் பான் எண் இணைக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், வங்கியில் புதிய அக்கவுண்ட்டை திறப்பது, அசையா சொத்துக்களை வாங்குவது, உங்கள் அடையாளத்தை நிரூபிப்பது மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது போன்ற சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் பான் அட்டை செயல் இழந்துவிட்டால், அதை நீங்கள் அடையாள ஆவணமாகக் கூட பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இது பல இடங்களில் உங்களுக்குச் சிக்கலை உருவாக்கும்.

ரூ. 1,000 வரை அபராதமா? ரூ. 500 அபராதம் எதற்கு?
Central Board of Direct Taxes (CBDT) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கத் தவறும் நபர்களுக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 139ஏஏ இன் துணைப்பிரிவு (2) இன் விதி படி, பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் முறையின் கீழ் ஒவ்வொருவரின் ஆதார் எண்ணும் பான் எண்ணும், குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் இணைக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால், கூறப்பட்ட துணைப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ இணைப்பைச் செய்யும் பட்சத்தில் குறைந்தது ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களின் ஆதார் - பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?
உங்கள் பான் எண்ணுடன் ஏற்கனவே உங்கள் ஆதார் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அதன் நிலையை அறிந்துகொள்ள இந்த நேரடி link-aadhaar-status இணைப்பு லிங்க் ஐ கிளிக் செய்து பயன்பெறுங்கள். உங்களின் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஏப்ரல் 1, 2022 ஆம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடக் கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பான் - ஆதாரை இன்னும் இணைக்கப்படவில்லையா?
உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இன்னும் நீங்கள் இணைக்கவில்லை என்றால், முடிந்த வரை விரைவில் இந்த இரண்டு ஆவணங்களையும் இணைப்பதே உங்களுக்கு முக்கிய வேலையாக இருக்க வேண்டும். இன்னும் தாமதப்படுத்தினால் உங்களின் பான் நம்பர் செயலிழந்து போக வாய்ப்புள்ளது. ஆக, செல்லுபடியாகும் ஒரு பான் நம்பர் இல்லாதவர்கள், வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாமல் போகும், நிலுவையில் உள்ள வருமானம் மற்றும் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போகும். அதிக விகிதத்தில் வரி விலக்குகளைப் பெறுவது போன்ற பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

பான் - ஆதாரை ஆன்லைன் வழியாக இணைப்பது எப்படி?
இப்போது துவங்கி அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் உங்களின் ஆதார் தகவல் பான் கணக்குடன் இணைக்கப்பட்டால் ரூ. 1000 என்கிற அதிகபட்ச அபராதத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. அதவது, அடுத்த மூன்று மாத காலகட்டத்திற்குள் உங்கள் ஆதார் - பான் இணைக்கப்பட்டால் குறைந்தபட்சம் ரூ. 500 சேமிக்க வாய்ப்புள்ளது. உங்களின் பான் - ஆதாரை ஆன்லைன் வழியாக இணைப்பது எப்படி? என்பதைப் பார்க்கலாம்.

அபராதம் செலுத்தி ஆன்லைனில் ஆதார் மற்றும் பான் இணைப்பது எப்படி?
- www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும்.
- இடது பக்கத்தில் உள்ள 'குவிக் லிங்க்ஸ்' ('Quick Links) பிரிவில் 'லிங்க் ஆதார்' (Link Aadhaar) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அடுத்தபடியாக உங்களுடைய பான் எண், ஆதார் டேட்டா, பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
- பின்னர், I accept to validate my Aadhaar details என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு, Continue என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒடிபி (OTP) அனுப்பி வைக்கப்படும். தேவையான தகவல்களை உள்ளிட்டு Validate என்பதை கிளிக் செய்யவும்.
- நீங்கள் அபராதம் செலுத்திய பிறகு, உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படும்.



Click it and Unblock the Notifications