ரெடியா இருங்க.. விரைவில் புதிய PAN 2.0 அமல்.. புது பான் கார்டு அப்ளை செய்ய வேண்டுமா? எவ்வளவு செலவாகும்?
இந்திய குடிமக்களுக்கான வரி தொடர்பான சேவைகளை எளிமைப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக பான் 2.0 திட்டத்தை (PAN 2.0 project) அறிமுகம் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவினால் (CCEA) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு ரூ.1,435 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பான் 2.0 அமைப்பின் கீழ், புதிய பான் அட்டைக்கு விண்ணப்பித்தல், பான் அட்டையில் உள்ள விவரங்களை புதுப்பித்தல் அல்லது சரிபார்த்தல், பான் அட்டை உடன் ஆதாரை இணைத்தல் மற்றும் ஆன்லைன் சரிபார்ப்பு போன்ற பான் மற்றும் டான் (TAN) தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

தற்போது, இந்த சேவைகள் எல்லாம் இ-ஃபைலிங் (e-Filing) போர்டல், UTIITSL மற்றும் Protean (முன்னர் NSDL) உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களின் வழியாக அணுக கிடைக்கின்றன. பான் 2.0 அமைப்பின் அறிமுகமானது இப்படி "துண்டு துண்டாக" உள்ள சேவைகளை, ஒன்றாக திரட்டி அதை யூஸர் பிரெண்ட்லி டிஜிட்டல் இன்டர்பேஸ் உடன் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் இந்த புதிய பான் 2.0 அமைப்பானது காகிதமில்லா செயலாக்கத்தையும் ஊக்குவிக்கும், இ-பான் அட்டைகளை விரைவாக வழங்கும் மற்றும் தரவு பாதுகாப்பு மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகளை மேம்படுத்தும். இப்படிப்பட்ட பான் 2.0 செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான கேள்விகளும், அதற்கான பதில்களும் உள்ளன:
1. பான் 2.0 எப்போது அறிமுகமாகும், அதாவது எப்போது அமலுக்கு வரும்? பான் 2.0 திட்டமானது அடுத்த ஆண்டு, அதாவது 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வரவுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட் வெளியாகலாம்.
2. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? அவசியமில்லை! உங்களிடம் ஏற்கனவே பான் கார்டு இருந்தால், நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. உங்கள் தற்போதைய பான் கார்டு ஆனது புதிய பான் 2.0 அமைப்பின் கீழ் செல்லுபடியாகும்.
3. திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய எவ்வளவு செலவு ஆகும்? பான் 2.0 திட்டத்தின் கீழ் பான் கார்டு அப்டேட்கள் மற்றும் திருத்தங்கள் ஆனது இலவசமாக செய்யப்படலாம். மேலும் நீங்கள் கோரிய மாற்றம் செய்யப்பட்ட பின்னர், பான் உடன் பதிவு செய்யப்பட்டு உள்ள உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ-பான் கார்டு அனுப்பப்படும்.
4. பான் 2.0 திட்டத்தின் கீழ் எளிதான சரிபார்ப்புக்காக க்யூஆர் கோட் ஆனது மேம்படுத்தப்படும். அதாவது பான் கார்டுகளில் உள்ள க்யூஆர் குறியீடுகள் ஆனது தரவுத்தளத்திலிருந்து நேரடியாக புதுப்பிக்கப்பட்ட தகவல்களை காண்பிக்கும், இது சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
5. பான் 2.0 திட்டம் ஆனது டிஜிட்டல் இந்தியா மற்றும் ஒருங்கிணைந்த வரி அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும். பான் 2.0 மேம்படுத்தல் என்பது இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா உந்துதலின் ஒரு பகுதியாக இருக்கும். இதன் மூலம் அரசாங்கத்தின் அனைத்து டிஜிட்டல் சேவைகளுக்கும் பான் கார்டு ஒரு உலகளாவிய ஐடியாக மாறக்கூடும்.
முன்னரே குறிப்பிட்டபடி ஏற்கனவே பான் கார்டு வைத்து இருப்பவர்கள் இப்போதைக்கு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. பான் வைத்திருப்பவர்கள் தங்கள் தற்போதைய கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். உங்கள் பான் காரட்டில் க்யூஆர் குறியீடு இல்லையென்றால், தற்போதைய மற்றும் புதிய அமைப்புகளில் மறுபதிப்புக்கு (Reprint) விண்ணப்பிக்கலாம். பான் 2.0 செயல்பாட்டுக்கு வந்தவுடன் அனைத்து புதுப்பிப்புகளும் சேவைகளும் எளிமையாகிவிடும்.


Click it and Unblock the Notifications








