அடுத்தடுத்த அடி: இப்போ பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை- காரணம் தெரியுமா?
இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டிலும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களை இந்த செயலி கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன செயலிகளுக்கு தடை
லடாக் எல்லையில் இந்தியா சீனாவிடையே தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதையடுத்து இந்தியாவில் டிக்டாக், யூசிபிரவுசர் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு சீன பொருட்களை தவிர்க்கும்படியான உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க அரசு முணைப்போடு செயல்படத் தொடங்கியது.

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்
இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிலர் விபரீத முடிவுகள்
இந்தியாவில் பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என சிலர் விபரீத முடிவுகளை எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. அந்த அளவிற்கு டிக்டாக்கின் ரசிகர்களாக அதன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி டிக்டாக் தடையால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

டிக்டாக் செயலி அமெரிக்காவிலும் தடை
சீனாவின் பைட் டான்ஸூக்கு சொந்தமான டிக்டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக் மற்றும் விசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடை
இந்த நிலையில் பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் மட்டும் சுமார் 39 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் வாட்ஸ்அப், முகநூலிற்கு பிறகு அதிக பதிவிறக்கங்கள் கொண்ட செயலிகாவும் டிக்டாக் இருக்கிறது.

அநாகரீம் மற்றும் ஆபாசமான வீடியோக்கள்
டிக்டாக் செயலியில் அநாகரீமான பதிவுகளும், ஆபாசமான வீடியோக்களும் அதிகளவு வருவதாக பாகிஸ்தான் அரசுக்கு புகார்கள் குவிந்துள்ளது. இந்த செயலியில் இணைய சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து டிக்டாக் செயலியில் இருக்கும் அநாகரீக, ஆபாச வீடியோக்களை அகற்றும்படி பாகிஸ்தான் அரசு டிக்டாக் நிறுவனத்திடம் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு தடை
இருப்பினும் டிக்டாக் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுக்கு டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தொலை தொடர்புத் துறை அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
source: ndtv.com


Click it and Unblock the Notifications