மனிதகுலத்தை அழிக்கும் AI.. ரகசியமாக உருவாகும் Q செயற்கை நுண்ணறிவு ஆபத்தானதா? உண்மை என்ன?
ஏஐ (AI), ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence), ஓபன் ஏஐ (Open AI), சாட்ஜிபிடி (ChatGPT), சாம் ஆல்ட்மேன் (Sam Altman) என்ற வார்த்தைகளை தான் கடந்த சில நாட்களாக நாம் அதிகமாக கேட்டும், பார்த்தும் வருகிறோம்.
செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறப்போகிறது என்ற பகீர் தகவலுடன் பல பரபரப்பு திருப்பங்களை சமீபத்தில் நாம் கேள்விப்பட்டு வருகிறோம். உண்மையிலேயே, ஏஐ தொழில்நுட்பத்தின் (ai technology) வளர்ச்சி மனிதகுலத்தின் அழிவிற்கு வழிவகுக்குமா என்ற கேள்வி இப்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உண்மை என்ன? ஆபத்தை அறிந்தும் அரசாங்கம் மௌனம் காக்கிறதா? இதோ முழு விபரம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்ந்து பரவலாக வளர்ந்து வருகிறது. நம்முடைய அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஏஐ அம்சங்கள் புகுறைத்துவங்கியுள்ளன. பலர் இந்த வளர்ச்சியை மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக கருதுகின்றனர். இருப்பினும், மற்றவர்கள் இதை ஆபத்தானதாக கருதுகின்றனர்.
மனிதகுலத்தை அச்சுறுத்தக்கூடிய சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence Threat To Humanity):
ஏனென்றால், சமீபத்தில் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்த ஓபன்ஏஐ ஊழியர்கள், "மனிதகுலத்தை அச்சுறுத்தக்கூடிய சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு" பற்றி எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பொதுமக்கள் இடையே பெரும் கவலைகளையும், விவாதங்களையும் தூண்டியது. ஓபன்ஏஐ (OpenAI), நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இயக்குநர்கள் குழுவால் வெளியேற்றப்பட்டார்.
எதிர்பாராத அழுத்தத்திற்குப் பிறகு மீண்டும் பணியில் அவர் அமர்த்தப்பட்டார். அதன் பிறகு, சிஇஓ சாம் ஆல்ட்மேன் (CEO Sam Altman) குழுவில் மாற்றங்களைச் செய்தார். இது மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கியது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றோம். இந்த நிகழ்வுக்கு பின்னால் உள்ள காரணங்களில் ஒன்றாக, மனிதகுலத்தின் முடிவைக் கொண்டு வரக்கூடிய ஒரு ரசகசிய கண்டுபிடிப்பு மறைந்திருக்கிறது என்று வதந்திகள் வெளியாகியுள்ளது.
Q என்று பெயரிடப்பட்ட AI எப்படியானது? இது ஆபத்தானதா?
OpenAI பல்வேறு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் செயல்படுகிறது. இவற்றில் மிகவும் புதிய வெர்ஷன் என்றால் அது GPT-3.5 மற்றும் GPT-4 தான். ஆனால், நிறுவனம் Q என்று பெயரிட்டுள்ள மற்றொரு AI மாடலில் சத்தமில்லாமல் ரகசியமாக பணிபுரிந்து வருகிறது. Q என்ற இந்த செயற்கை நுண்ணறிவு நாம் இதுவரை பயன்படுத்திய ChatGPT அல்லது பிராட் (Bard) போன்ற வழக்கமான AI இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியான தகவலின் படி, இந்த Q என்பது சயின்ஸ் பிக்ஷன் படங்களில் இருந்து வெளியே வரும் தொழில்நுட்பம் போன்றது, மிகவும் சிக்கலான பணிகளைச் எளிமையாக செய்யும் திறன் கொண்டது. சில பணியாளர்கள் Q என்பது ஆபத்தான அறிவார்ந்த மட்டத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கிறது என்று நம்புகிறார்கள்.
OpenAI ஊழியர்கள் மிரள காரணம் என்ன?
அவர்களின் கூற்றுப்படி, இந்த AI மிகவும் புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. அத்துடன் நின்றுவிடாமல் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறனை இது வளர்த்துக்கொள்ள கூடிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது. உண்மையில், சில ஊழியர்கள் இந்த கண்டுபிடிப்பு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் நடத்தை குறித்து மிகவும் கவலையடைந்துள்ளனர். இதனால், ஊழியர்கள் இந்த விஷயத்தை இயக்குநர்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
சாம் ஆல்ட்மேனுடன் கலந்துரையாடிய பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி ஆபத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தவறியதைக் காரணம் காட்டி, அவரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நிச்சயமாக, இவை அனைத்தும் தற்போது வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க நிறுவனம் தயக்கம் காட்டுவது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.
Q இன் சரியான செயல்பாடுகள் மற்றும் அது ஏன் இவ்வளவு பயத்தைத் தூண்டுகிறது என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், என்றாவது ஒரு நாள் நிச்சயம் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், அதிநவீனமாக மாறி, திரைப்படங்களில் வருவது போன்ற பேரழிவுகளை யதார்த்தமாக நாம் பார்க்கவும் வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








