எல்லை மீறுகிறதா? திடீரென பிரதமர் மோடியை சந்திக்கும் ChatGPT காட்ஃபாதர்!
சாட்ஜிபிடியை (ChatGPT) உருவாக்கிய ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman), பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சந்திப்புக்கான காரணமென்ன, இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவை வெறும் தொழில்நுட்பம் என்று சொல்லி சுருக்கிவிட முடியாது. மனித வரலாறு கண்டிராத மிகப்பெரும் வளர்ச்சிக்கு காரணமாக செயற்கை நுண்ணறிவு அமையும் என்று கணிக்கப்பட்ட அதே வேளையில், மனித இனத்துக்கே அதனால் ஆபத்தை விளைவிக்க முடியும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவு குறித்து யாரும் கவலைப்படாத நேரத்தில், ஓப்பன் ஏஐ (Open AI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடியின் (ChatGPT) வருகை தொழில்நுட்பத்தின் அசூர வளர்ச்சியையும், ஆபத்தையும் ஒரே நேரத்தில் மக்களுக்கு காட்டியது. வெறும் சில மாதங்களில் மிகப்பெரும் மைல் கல்லை சாட்ஜிபிடி எட்டிவிட்டது. இப்போது கோடிக்கணக்கான மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரையில் சாட்ஜிபிடியை பயன்படுத்துகின்றனர்.
ஒருகாலத்தில் மிகப்பெரும் மனித அறிவாற்றலாக பார்க்கப்பட்ட கம்ப்யூட்டர் கோடிங் எழுதுதலை, சாட்ஜிபிடி எளிதாக செய்து முடிக்கிறது. இப்படி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், செய்திகள் மட்டுமல்லாமல் கணக்குகள் வரையில் சாட்ஜிபிடியால் எழுத முடிகிறது. அதைப்பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர்.
வழக்கறிஞர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள், எழுத்தாளர்கள் சாட்ஜிபிடியால் வேலை பறிபோகும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாளாடைவில் மற்ற துறைகளிலும் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஒரு தரப்பும், வருங்காலத்தில் மனித வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மற்றொரு தரப்பும் கூறிவருகிறது.
சொல்லப்போனால், பல்லாயிரணக்கான தொழில்நுட்ப ஊழியர்கள் சாட்ஜிபிடி வருவகையால் நாள்தோறும் தங்களது பணியை இழந்து வருகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள், சாட்ஜிபிடிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் (OpenAI CEO Sam Altman) இந்தியா, இஸ்ரேல், ஜோர்டன், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
இப்போது, இந்தியா வந்திருக்கிறார். ஐஐஐடிடெல்லியில் நடைபெறும் நிகழ்வில், நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ மற்றும் தொழில்முனைவோர்களை சந்திக்க உள்ளார். அதேபோல மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முக்கிய நிர்வாகிகளையும் அவர் சந்திக்க உள்ளார். இந்த சூழலில் திடீரென பிரதமர் மோடியை அவரது அலுவலத்தில் சாம் ஆல்ட்மேன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் ஓப்பன் ஏஐ நிறுவனம் மூலம் மேற்கொள்ள உள்ள எதிர்கால திட்டங்கள் குறித்து, இந்த சந்திப்பில் சாம் ஆல்ட்மேன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு செயற்கை நுண்ணறிவு துறையில் மிகப்பெரும் மாற்றத்துக்கு ஆரம்பப் புள்ளியாக அமையும் என்று கூறப்படுகிறது. அதேபோல, சாட்ஜிபியில் கொண்டுவரப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications