அப்பவே எச்சரித்தோம்- ஒரே மெசேஜ், ஒரே கால் ரூ.2.4 லட்சம் அபேஸ்: இனிமே உஷாரா இருங்க!
சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தினி பிரபாகர். மருத்துவராக சேவை புரிந்து வரும் இவர், அண்ணாநகர் பகுதி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் ஏமாற்றப்பட்ட விவரங்கள் குறித்து விளக்கமளித்து இருக்கிறார். அதில், அவருடைய மொபைல் எண்ணிற்கு புதிய நம்பரில் இருந்து கேஒய்சி தகவல் பூர்த்தி செய்யும்படி கோரி மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

மெசேஜ் வந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்
இந்த தகவல் அளிக்கப்படாத பட்சத்தில் உங்கள் சிம்கார்டு முடக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெசேஜ் வந்த எண்ணை ட்ரூ காலர் செயலியில் சோதித்து பார்த்துள்ளார் மருத்துவர். அதில் இந்த எண் வோடோபோன் கேஒய்சி சர்வீஸ் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவர் சாந்தினி பிரபாகர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ரூ.10 ரீசார்ஜ் செய்ய வலியுறுத்தல்
அந்த அழைப்பில் பேசிய நபர், தங்களுக்கு க்விக் சப்போர்ட் என ஒரு லிங்க் அனுப்புகிறேன், அதன்மூலம் உடனடியாக ரூ.10 ரீசார்ஜ் செய்யவும். அப்படி செய்தால் சிம்கார்டு முடக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார். இதை நம்பி அவர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து ரீசார்ஜ் செய்துள்ளார். இதற்கான ரசீது ஆன்லைனில் வந்துள்ளது அதே சமயத்தில் அந்த அழைப்பை துண்டிக்க முடியாமல் இருந்துள்ளது.

முடங்கிய நிலையில் மொபைல்
அவர் சுதாரித்துக்கொள்வதற்குள் தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம், ரூ.90,000 மற்றும் ரூ.50,000 என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர் தனது மொபைலை கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளார். போன் முடங்கிய நிலையில் இருந்ததால் இதுகுறித்து மற்றவர்களிடம் தெரிவிக்க முடியாத நிலை நீடித்திருக்கிறது.

எந்த தகவலையும் பெறாமல் திருட்டு
அதன்பின் லேண்ட்லைன் எண் மூலமாக எஸ்பிஐ வங்கியை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஆரம்பத்தில் தெரிவித்தது போல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வங்கி விவரம், ஓடிபி உள்ளிட்ட எந்த தகவலையும் பெறாமல் இருந்த இடத்திலேயே மொபைலை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து ஹேக் செய்து பணம் கொள்ளையடித்துள்ளார்கள் என மருத்துவர் குறிப்பிட்டார். அண்ணாநகர் சைபர் கிரைம் காவல்துறையின்ர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைபர் பிரிவினர் எச்சரிக்கை
முன்னதாகவே இதுகுறித்து சைபர் பிரிவினர் எச்சரிக்கை விடுத்தனர். அதில், சீன ஹேக்கர்கள் எஸ்பிஐ பயனர்களை குறிவைத்து மோசடி வேலையில் ஈடுபடுகின்றனர். கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என மெசேஜ் அனுப்பி அதில் ஒரு மர்மமான வெப்சைட் லிங்கையும் அனுப்புகின்றனர், இந்த மர்ம வெப்சைட் லிங்க் அதிகாரப்பூர்வ வங்கி லிங்க் போன்றே உள்ளது என கூறப்படுகிறது. ஃபிஷிங் மோசடி மூலம் ஹேக்கர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பயனர்களை குறிவைக்கின்றனர்.

கேஒய்சி அப்டேட்
கேஒய்சி அப்டேட் செய்யும்படி வங்கி மெசேஜ் போன்று ஒரு லிங்கை அனுப்புகின்றனர். இதில் சந்தேகத்திற்கு இடமான லிங்க் ஒன்றை அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே வடிவமைத்து அனுப்புகின்றனர். மேலும் பயனர்களுக்கு இதுபோன்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

போலி மெசேஜ்கள், போலி அறிவிப்புகள்
அதேபோல் வெளியான தகவலின்படி வாட்ஸ் அப்-ல் எஸ்பிஐ வங்கி ரூ.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்குவதாக போலி மெசேஜ்கள் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து தகவல்களும் மோசடி செயல்கள் என்பதால் இதை நம்ப வேண்டாம் என இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்தியாவில் இணைய பயனர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் கடந்த 1 ஆண்டில் மட்டும் ஹேக்கிங்கிற்கு பலியாகி இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.
File Images


Click it and Unblock the Notifications