போச்சு.. OnePlus ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திடீர் தடை.. என்ன காரணம்? எந்த நாட்டில்?
OnePlus Sales Ban: புதிய காப்புரிமை சர்ச்சை காரணமாக ஜெர்மனியில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்டர்டிஜிட்டல் (InterDigital) என்கிற நிறுவனம் உடனான மோதலின் விளைவாக இந்த சிக்கல் உருவாகியுள்ளது. இன்டர்டிஜிட்டல் என்பது வயர்லெஸ் தொழில்நுட்பம் (குறிப்பாக 5ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில்) நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் எழுப்பிய காப்புரிமை சர்ச்சையின் விளைவாக ஜெர்மனியில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இன்டர்டிஜிட்டல் நிறுவனத்தின் கூற்றுப்படி. ஒன்பிளஸ் நிறுவனமானது முறையான அங்கீகாரம் இல்லாமல் தனது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் விளைவாக ஒன்பிளஸ் ஜெர்மனியின் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒன்பிளஸ் பேட் 2, பட்ஸ் ப்ரோ 3 மற்றும் வாட்ச் 2 போன்ற பிற ஒன்பிளஸ் தயாரிப்புகள் நிறுவனத்தின் ஜெர்மன் இணையதளத்தில் வாங்க கிடைக்கின்றன.

ஒன்பிளஸ் நிறுவனம், ஜெர்மனியில் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்நிறுவனம் நோக்கியாவுடனான நீண்டகால காப்புரிமை சர்ச்சையை தீர்த்த பின்னரே அங்கே மீண்டும் சந்தைக்கு திரும்பியது. இந்த பிரச்சனை - கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை ஜெர்மனிக்கு வெளியே வைத்திருந்தது.
அந்த சிக்கலும் கூட, நோக்கியாவின் காப்புரிமை பெற்ற மொபைல் தொழில்நுட்பத்தை முறையான உரிமம் இல்லாமல் ஒன்பிளஸ் நிறுவனம் பயன்படுத்துவதை மையமாக கொண்டது தான். ஒன்பிளஸ் நிறுவனம் அந்த சிக்கலை சரிசெய்த வேகத்தில் ஜெர்மனியில் மற்றொரு பின்னடைவை எதிர்கொள்கிறது. இதுகுறித்த விளக்கத்தில், ஒன்பிளஸ் நிறுவனம், அறிவுசார் சொத்துரிமைகளை மிகவும் மதிப்பதாகவும், பேச்சுவார்த்தை மூலம் இன்டர்டிஜிட்டலுடன் பிரச்சினையை தீர்க்க உறுதிபூண்டிருப்பதாகவும், நிலைமையை விரைவில் சரி செய்வோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ் மற்றும் இன்டர்டிஜிட்டல் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்து, இரண்டும் சேர்ந்து ஒரு தீர்வை எட்ட எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி எந்த தெளிவும் இல்லை. நோக்கியா உடனான முந்தைய தகராறை தீர்க்க, ஒன்பிளஸ் நிறுவனம் சுமார் 2 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் இன்டர்டிஜிட்டல் உடனான சிக்கல் தீர் அவ்வளவு காலம் ஆகாது. இது விரைவாக தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்த அக்டோபர் மாதமே நடக்கவுள்ளதால், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சர்ச்சையை கூடிய விரைவில் தீர்க்க பார்க்கும். இல்லாவிட்டால் ஜெர்மனியில் நடக்கும் குறிப்பிடத்தக்க விற்பனை வாய்ப்புகளை இந்த பிராண்ட் இழக்க நேரிடும்.
ஜெர்மனியில் நடக்கும் காப்புரிமை சிக்கல்கள் ஒருபக்கம் இருக்க, ஒன்பிளஸ் நிறுவனமானது இந்தியாவிலும் சாத்தியமான சவால்களை எதிர்கொள்கிறது. அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (AIMRA) ஆனது, இந்த பிராண்டின் வணிக நடைமுறைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது, இந்நிறுவனத்தின் "போட்டிக்கு எதிரான நடத்தை" குறித்து குற்றம் சாட்டியுள்ளது.
ஒன்பிளஸ் மற்றும் பிற சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பாரம்பரிய சில்லறை விற்பனையாளர்களை ஒதுக்கி வைக்கும் பிரத்யேக விநியோக ஒப்பந்தங்களை பராமரித்து வருவதாக ஏஐஎம்ஆர்ஏ கூறுகிறது. இந்த குற்றசாட்டு, முக்கிய சந்தைகளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆகமொத்தம் ஒன்பிளஸ் 13-ன் விற்பனைக்கு வேட்டு வைக்க, இப்போதே பிள்ளையார் சுழி போட்டுவிட்டது போல் தெரிகிறது.
ஏற்கனவே ஒன்பிளஸ் 13 ஆனது 2 மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகமாகிறது. இதை ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லூயிஸ் லீயும் உறுதிப்படுத்தி உள்ளார். முன்னதாக இது டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகி, பின்னர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது!


Click it and Unblock the Notifications








