NO மாற்றம்.. 2026 டிசம்பர் கெடு.. Aadhaar வைத்து இருக்கும் எல்லோர் வயிற்றிலும் பாலை வார்த்த அமைச்சகம்!
டிசம்பர் 2026 க்குள் ஆதார் அட்டையானது முற்றிலுமாக ரீடிசைன் செய்யப்படும் என்று, அதாவது மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. அதாவது புதிய வண்ணங்கள், புகைப்படம் மட்டுமே இருக்கும், மீதமுள்ள விவரங்கள் க்யூஆர் கோட் ஆக இருக்கும், அதை தகுதியான ஸ்கேனர் வைத்து ஸ்கேன் செய்தால் மட்டுமே, அதிலுள்ள விவரங்களை பார்க்க முடியும் - என்றெல்லாம் தகவல் வெளியாகி இருந்தது.
இதன் விளைவாக.. "மறுபடியும் முதல்ல இருந்தா.. இப்போ தானே ஆதார்ல எல்லாத்தையும் அப்டேட் பண்ணி பக்காவா வச்சு இருக்கோம்.. அதுக்குள்ள புது டிசைன், புது கலர்னு சொன்னா எப்படி.. இதுக்கு எவ்ளோ நாள் ஆகுமோ.. எங்கலாம் போகணுமோ" என்கிற சலசலப்புகள் ஏற்பட தொடங்கியது.

ஆனால் - ஆதார் அட்டைக்கு "புதிய தோற்றம்" கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆக - ஹாலோகிராஃபிக் அம்சங்களுடன் அரசு அடையாள அட்டையானது மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், அத்தகைய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டில் இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
அமைச்சகம் என்ன கூறியது? தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் படி, ஆதாரின் தோற்றம் எவ்வாறு மாறக்கூடும் என்பது குறித்த செய்திகளும் சமூக ஊடகப் பதிவுகளும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, அவை சரியானவை அல்ல. அத்தகைய மாற்றங்கள் செய்ய எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது.
மேலும் பொதுமக்கள் இதுபோன்ற செய்திகளையும் சமூக ஊடகப் பதிவுகளையும் புறக்கணித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India - UIDAI) அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பத்திரிக்கை தகவல் பணியகம் (PIB) வெளியிடும் பத்திரிக்கை அறிக்கைகள் வழியாக வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளது.
2026 இல் ஆதார் அட்டையில் உண்மையிலேயே என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது? தற்போது ஆதார் அங்கீகார சேவையானது (Aadhaar authentication service) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு தனிநபரின் ஆதார் எண் மற்றும் அது தொடர்பான அடையாள தகவல்கள் ஆதார் தரவுத்தளத்துடன் (Aadhaar database) சரிபார்க்கப்படுகின்றன.
இந்த சரிபார்ப்பு, அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளை வழங்குவதற்காக, ஒடிபி (OTP), பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி, முகம்) அல்லது மக்கள்தொகை விவரங்களை பயன்படுத்தி தனிநபரின் அடையாளத்தை உறுதி செய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஆதார் முக அங்கீகாரம், செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. இது முக பயோமெட்ரிக்ஸின் துல்லியமான அங்கீகாரத்தை சாத்தியமாக்குகிறது.
ஆதார் அங்கீகார சேவைகளைப் பயன்படுத்த விரும்பும் எந்தவொரு நிறுவனமும், ஆதார் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, யுஐடிஏஐ-இல் அங்கீகார பயனர் முகமைகளாக (Authentication User Agencies - AUA) அல்லது கேஒய்சி (KYC) பயனர் முகமையாக (KYC User Agency - KUA) பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு AUA அல்லது KUA-வும் அங்கீகார பதிவுகளை இரண்டு ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும். இந்த பதிவுகளை ஆதார் எண் வைத்திருப்பவர்கள் அணுகலாம் அல்லது குறைதீர்ப்பு மற்றும் தகராறு தீர்வுக்காக பகிரலாம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த பதிவுகள் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பகப்படுத்தப்பட்டு, பின்னர் நீக்கப்படும்.
134 கோடி: கடந்த மார்ச் மாதம், அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஆதார் தற்போது சுமார் 134 கோடி பயனர்களுடன் உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக உள்ளது. யுஐடிஏஐ ஆல் பராமரிக்கப்படும் இது, 17,000 கோடிக்கும் அதிகமான அங்கீகார பரிவர்த்தனைகளை நிறைவு செய்துள்ளது. இந்த தகவலை, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, கடந்த 18 மார்ச் 2026 அன்று மக்களவையில் சமர்ப்பித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications