ஆதார் கார்டு அப்டேட்.. இனி நகலை கொடுக்கும் அவசியம் இருக்காது.. வருகிறது புதிய வசதி.. இதோ முழு விவரம்..
ஆதார் கார்டு (Aadhaar Card) இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்காமல் க்யூ.ஆர் கோடு (QR code) வாயிலாக ஆவணங்களைச் சரிபார்க்கும் செயலியை அறிமுகம் செய்ய ஆதார் ஆணையம் முடிவும் செய்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆதார் அட்டை நகல் தேவைப்படாது
அதாவது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. குறிப்பாக ஆதார் எண் இல்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலையில், அனைத்து மக்களும் ஆதார் அட்டை நகல்களை எடுத்துச் செல்லும் நிலையும் உள்ளது.

எனவே மக்களின் இந்த சுமையைக் குறைக்கும் வகையில், ஆதார் அட்டைகளை வழங்கும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய செயலியால் ஆதார் அட்டையின் நகலை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது க்யூ.ஆர் கோடு முறையைப் பயன்படுத்தி செயலி வாயிலாக ஆதார் அட்டையைச் சரிபார்க்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுவும் இதன் மூலம் பாதி மறைக்கப்பட்ட ஆதார் அட்டையை மின்னணு முறையில் பகிர முடியும்.
அதாவது ஆதாரின் 12 இலக்க எண்களுக்குப் பதிலாக அந்த அட்டையில் எட்டு எண்கள் மறைக்கப்பட்டு, கடைசி நான்கு எண்கள் மட்டுமே பகிரப்படும். மேலும் இந்த புதிய முறை வாயிலாக பயோமெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை, கருவிழி சரிபார்க்கும் பணியைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் ஆதார் மையத்தைப் பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை இருக்காது.
ஆதார் அட்டையில் முகவரிகள், மொபைல் எண்களைப் புதுப்பித்தல், பெயர் மாற்றம் மற்றும் தவறான பிறந்த தேதியைச் சரிபார்த்தலைக் கூட வீட்டில் இருந்தே செய்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நடவடிக்கை காகிதப்பணிகள் குறைத்தல், போலி ஆவணங்களின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் குடிமக்களுக்குச் செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் ( UIDAI CEO Bhuvnesh Kumar) இது குறித்து தெரிவித்தது என்னவென்றால், கைரேகை, கருவிழிப்படலம் மாற்றத்தைத் தவிர அனைத்து விபரங்களையும் மாற்றுவதற்கு ஏதுவாக செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக ஆணையத்திடம் உள்ள 1 லட்சம் இயந்திரங்களில் 20000 இயந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் தங்கும் விடுதிகள், ரயில் டிக்கெட் பரிசோதனை, சொத்து ஒப்பந்தம் போன்ற நடைமுறைகளில் கியூ.ஆர் கோடு ஆதார் அட்டை சரிபார்க்கப்படும். இதன் மூலம் பல மோசடிகள் தடுக்கப்படும். பின்பு புதிய செயலி மற்றும் கியூ.ஆர்.இ கோடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புவனேஷ் குமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications