ஃபாஸ்டேக் இருக்கா? இந்த விஷயத்தில் கவனமாக இருங்க.. இல்லனா பிளாக் லிஸ்ட் ஆயிடும்.. ஏன்?
நாட்டில் டோல் வசூல் முறையை மேலும் துல்லியமாகவும் நம்பகமானதாகவும் மாற்றும் முயற்சியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய உத்தரவின்படி, தவறான வாகனப் பதிவு எண்களுடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக்குகள் உடனடியாக பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஏப்ரல் 15-ல் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, ஃபாஸ்டேக் வழங்கும் அனைத்து வங்கிகளும் தாங்கள் வழங்கியுள்ள ஃபாஸ்டேக்-களில் இணைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களை (VRN) கட்டாயமாகச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் தவறான அல்லது பொருந்தாத தகவல்கள் இருந்தால், அந்த ஃபாஸ்டேக் உடனடியாக பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், சமீபத்தில் டோல் கேட்களில் பல புகார்கள் எழுந்ததுதான். சில வாகனங்களில் ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யும் போது, டிஸ்பிளேவில் காணப்படும் வாகன எண் மற்றும் வாகனத்தில் உண்மையான பதிவு எண் பொருந்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இது டோல் வசூல் முறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, அரசு வருவாய் இழப்புக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
அதுவும் இந்த பிரச்சனை ஏன் வருகிறது என்று பார்க்கும்போது, பழைய ஃபாஸ்டேக் பதிவுகள் காரணமாக இருப்பது தெரிய வருகிறது. ஃபாஸ்டேக் அமைப்பு ஆரம்பத்தில் VAHAN தரவுத்தளத்துடன் முழுமையாக இணைக்கப்படாத காலத்தில் பல டேக்குகள் வழங்கப்பட்டன. குறிப்பாக அந்த சமயத்தில் வாகன விவரங்கள் பெரும்பாலும் கைமுறையாகப் பதிவு செய்யப்பட்டதால், பல இடங்களில் தவறுகள் ஏற்பட்டன. இப்போது முழுமையாக டிஜிட்டல் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பழைய பிழைகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தவறான அல்லது செல்லாத வாகன எண்களுடன் உள்ள ஃபாஸ்டேக்-ஐ கண்டறிந்து உடனடியாக பிளாக்லிஸ்ட் செய்ய வங்கிகளுக்கு NHAI உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த செயல்முறையை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் டோல் வசூல் முறையை மேலும் ஒழுங்குபடுத்தவும், தவறுகளைக் குறைக்கவும் முடியும்.
அதேபோல் வரும் காலங்களில் மல்டி-லேன் ஃப்ரீ ஃபளோ (MLFF) என்ற புதிய டோல் வசூல் முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் வாகனங்கள் டோல் கேட்களில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது, அதுவும் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் வசூல் நடைபெறும். இதனால் சரியான வாகன தகவல் முக்கியமானது. தவறான தகவல்கள் இருந்தால், நேரடியாக இ-அறிவிப்பு அனுப்பப்படலாம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் 1988ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இப்போதே உங்கள் பாஸ்டேக் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உடனே சரிபார்ப்பது மிகவும் நல்லது.
மேலும் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக சுங்க கட்டணத்தைச் செலுத்தும் முறை நிறுத்தப்பட்டது. அதாவது ஏப்ரல் 10 முதல் கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின்படி, ஃபாஸ்டேக் மற்றும் யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் நடைமுறைகளில் மட்டுமே கட்டணம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை சுங்கச்சாவடி கடக்க கூடிய வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லை என்றாலும் யுபிஐ பயன்படுத்தி சுங்க கட்டணத்தைச் செலுத்த முடியும். ஆனாலும் வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கும் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ரொக்கமாக பணம் கொடுத்தால் சுங்கச்சாவடியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே நீங்கள் உங்களது வாகனத்தில் ஃபாஸ்டேக் இருப்பதையும் அந்த கணக்கில் பணம் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் யுபிஐ கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு வழிகளும் இல்லை என்றால் ரொக்கமாக பணம் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சுங்கச்சாவடியில் செல்லும் வாகனம் ஃபாஸ்டேக், யுபிஐ என இரண்டு வழிகளிலும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்களது மொபைல் எண்ணுக்கு கட்டணம் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த கட்டணத்தை நீங்கள் மூன்று நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications








