ரூ.299-ல் இருந்து ரூ.349.. ரூ.399-ல் இருந்து ரூ.466.. Jio, Airtel திட்டங்கள் விலை உயர்வு! எப்போது முதல் அமல்?
கடந்த 2021-ல், இந்திய டெலிகாம் துறையில் அறிவிக்கப்பட்ட "மிகவும் மோசமான" ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை.. இப்போது நாம் மறந்து இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அது மிகவும் கடினமான சூழ்நிலையாக இருந்தது; ஏனென்றால் ரீசார்ஜ் திட்டங்களின் மீது 20-25% விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்தபடியாக.. இன்னொரு "பெரிய அளவிலான" ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு, கூடிய விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அது எப்போது முதல் அமலுக்கு வரும்? இந்தமுறை வரும் விலை உயர்வானது எத்தனை சதவிகிதமாக இருக்கும்? என்னென்ன திட்டங்கள் தோராயமாக எவ்வளவு விலை அதிகரிக்கும்? இதோ விவரங்கள்:

எப்போது முதல் அமலுக்கு வரும்? இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது முடியும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால், அதற்கு பிறகுதான் இந்நிறுவனங்களால் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவிக்க முடியும். நினைவூட்டும் வண்ணம், மக்களவை தேர்தல் ஆனது ஜூன் 1-ல் முடிவடைகிறது. ஆக வருகிற ஜூன் மாதத்திலேயே விலை உயர்வு அறிவிக்கப்படலாம்.
இந்தமுறை வரும் விலை உயர்வானது எத்தனை சதவிகிதமாக இருக்கும்? ரிபப்ளிக் வோர்ல்ட்டிற்கு டெலிகாம் ஆய்வாளர் (Telecom Analyst) ஒருவர் வழியாக கிடைத்த தகவலின்படி.. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் கட்டணங்களை 15-17% அதிகரிக்கும். இந்தியாவில், ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை முதலில் அதிகரிக்கும் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன திட்டங்கள் தோராயமாக எவ்வளவு விலை அதிகரிக்கும்? 17% என்கிற விலை உயர்வு, நடைமுறைக்கு வரும் பட்சத்தில்.. தற்போது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலையை ரூ.50 அதிகரித்து ரூ.349 ஆக மாற்றும். இதேபோல தற்போது ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலையை ரூ.67 அதிகரித்து ரூ.466 ஆக மாற்றும்.
5ஜி-ஐ வைத்து யாருமே இன்னும் பணம் பார்க்கவில்லை! முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டாலும் கூட.. இரண்டு நிறுவனங்களுமே இதுவரையிலாக 5ஜி-யை பணமாக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை என்கிற பெயரின் கீழ், ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் முற்றிலும் இலவசமாகவே 5ஜி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், 5ஜி நெட்வொர்க் சேவைகளைப் பயன்படுத்த நுகர்வோர்கள் கொஞ்சம் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்கிற உண்மையை மனதில் வைத்துக்கொள்ளவும்!
5ஜி சேவையையோ அறிமுகம் செய்யவில்லை என்றாலும் கூட விஐ என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திற்கும் ரீசார்ஜ் கட்டண உயர்வு மிகவும் தேவையான ஒரு நடவடிக்கையாக உள்ளது. ஏனென்றால் இந்நிறுவனத்தின் ஏஆர்பியு (ARPU - Average revenue per user) மிக மெதுவாகவே வளர்ந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையானது, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது. கடந்த பிப்ரவரி 2024-ல், இந்நிறுவனம் 1 மில்லியனுக்கும் (அதாவது 10 லட்சத்திற்கும்) அதிகமான வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது. 2024 ஜனவரியிலும் கூட 1.5 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்து இருந்தது. ஆகமொத்தம் சுமார் 2.5 மில்லியன் (25 லட்சம்) சந்தாதாரர்களை இழந்துள்ளது.
ஆனால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளன. ஏர்டெல் நிறுவனம் 2024-ல் இதுவரையிலாக மொத்தம் 2.25 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதேபோல ஜியோ நிறுவனமானது மொத்தம் 7.6 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மாதாந்திர செயல்திறன் குறிகாட்டி அறிக்கையில் (Monthly performance indicator report) இருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.


Click it and Unblock the Notifications