புது UPI ரூல்ஸ்.. பிப்.15 முதல் அமல்.. இனிமே 100 ரூபாயோ.. 1,000 ரூபாயோ.. போன பணம் திரும்ப வரும்.. என்ன மாறுது?
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகளை செய்யும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) புது விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த புது விதிகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இனிமேல் உங்களது யுபிஐ பரிவர்த்தனைகளில் பணம் எடுக்கப்படும்போது, இந்த விதிகள் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது.
யுபிஐ பரிவர்த்தனை சார்ஜ்பேக்கில் (UPI Transactions Chargeback) இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. யுபிஐ பரிவர்த்தனை சார்ஜ்பேக் என்பது, யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும்போது தொழில்நுட்ப கோளாறு, மோசடி அல்லது சிக்கல் போன்ற எதிர்பாராத காரணங்களால் பணம் டெபிட் செய்யப்பட்டால் அந்த பணத்தை திரும்பப்பெற இது பயன்படுகிறது.

அதாவது, ஒரு முறைக்கு இரு முறை பணம் டெபிட் செய்யப்படுவது, ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது ஒரு பொருளுக்கு 2 முறை பணம் டெபிட் செய்யப்படுவது, உங்களுக்கு டெலிவரி செய்யப்படாத பொருளுக்கும் பணம் டெபிட் செய்யப்படுவது போன்று உங்களது கவனத்துக்கு வராமலேயே உங்களது பணம் எடுக்கப்பட்டால், அதை பெறுவதற்கு இது முக்கியமாக இருக்கிறது.
இதுபோன்று பணம் எடுக்கப்பட்டால், அந்த பணத்தை திரும்ப பெறும் கோரிக்கையை உங்களது பேங்க் தொடங்கும். அந்த கோரிக்கையை பணம் சென்றடைந்த பேங்க் அங்கீகரித்தவுடன் உங்களுக்கு அந்த பணம் திருப்பி அனுப்பப்படுகிறது. ஆனால், உங்களது பேங்க் அதன் கோரிக்கையை செயல்படுத்தும் முன்பே பணத்தை எடுத்த பேங்க் உங்களுக்கு பணத்தை அனுப்பவும் செய்கிறது.
இதனால், பணம் வந்துவிட்டதால் அந்த கோரிக்கை நிகாரிக்கப்படுவதற்கும் அல்லது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் இடையே குழப்பம் மற்றும் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கலை சரி செய்வதற்காகவே இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இந்த புதிய சார்ஜ்பேக் விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் மூலம் கோரிக்கைகள் ஆட்டோமேட்டிக் செய்யப்பட இருக்கின்றன.
அதாவது, பணத்தை திரும்ப பெறுவதற்கான சார்ஜ்பேக் கோரிக்கைகளானது, பரிவர்த்தனை கிரெடிட் உறுதிப்படுத்தல் - டிசிசி (Transaction Credit Confirmation - TCC) அல்லது திரும்பப் பெறும் கோரிக்கைகள் (Raised Return Requests - RET) ஆகியவையின் அடிப்படையில் ஆட்டோமேட்டிக் முறையில் நடக்கும். இதன்மூலம் பணம் பெறப்பட்ட கோரிக்கைகள் தானாகவே நிராகரிக்கப்படும்.
அதேபோல பணத்தை பெற வேண்டிய கோரிக்கைகள் தானாகவே அங்கீகரிக்கப்படும். இதனால், பணத்தை அனுப்பிய மற்றும் பெற வேண்டிய பேங்குகளுக்கு இடையே நீடிக்கும் சிக்கல் மற்றும் குழப்பம் முடிவடைய இருக்கிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கும் வேகமாவும், சிரமம் இல்லாமலும் தவறாக எடுக்கப்பட்ட பணம் வந்து சேர்ந்துவிடும்.
முன்னதாக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் (UPI Transactions IDs) புதிய விதிகளை கொண்டு வந்தது. இந்த விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிகள் மூலம் யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது ஜெனரேட் செய்யப்படும் பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எழுத்துக்களுக்கு (Special Characters) தடை விதிக்கப்பட்டது.
ஆகவே, இந்த சிறப்பு எழுத்துக்கள் அடங்கிய பரிவர்த்தனைகள் நிகாரிக்கப்படுகிறது. எண்ணெழுத்து (Alphanumeric) என்றழைக்கப்படும் எழுத்துகள் மற்றும் நம்பர்கள் மட்டுமே அடங்கிய பரிவர்த்தனை ஐடிகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால், இதனால் கஸ்டமர்களுக்கு பாதிப்பு கிடையாது. அந்தந்த யுபிஐ ஆப்களே இந்த பரிவர்த்தனை ஐடிகளை ஜெனரேட் செய்கின்றன.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் முக்கால்வாசி பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதனால், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகிவை அவற்றில் புதுப்புது விதிகளை கொண்டு வருகின்றன. இந்த 2025ஆம் ஆண்டில் மாதத்துக்கு 2 விதிகள் அமலுக்கு வந்து இருக்கின்றன. இனிமேலும் வர வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








