புது UPI ரூல்ஸ்.. ஜூன் 30 முதல் அமல்.. பணம் அனுப்பும் முன் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
இந்தியா முழுவதும் யுபிஐ (upi) செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் தற்போது கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ பேமெண்ட் ஆப்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனை அதிகமாக இருக்கின்றது. சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள வரை இந்த யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனை மோசடியை தடுப்பதற்கு வரும் ஜுன் 30 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஜூன் 30ஆம் தேதி முதல்
அதாவது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த UPI சிஸ்டமில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தயாராக உள்ளது. குறிப்பாக இந்த மாற்றம் வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதன்படி 2025 ஜூன் 30-ம் தேதி முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும்.

அதுவும் தற்போது போனில் உள்ள யுபிஐ செயலிகளில் பணம் பெறுவோரின் பெயர் அல்லது புனைப்பெயர் போன்றவை தெரியும். ஆனால் புதிய விதிகளின் கீழ் இனி புனைப்பெயர் (nickname)தெரியாது. மொத்தமாக வரும் ஜூன் 30-க்குப் பிறகு, பணம் மாற்றப்படுவதற்கு முன்பு, பணம் பெறும் நபரின் அதிகாரப்பூர்வ வங்கி பதிவு செய்யப்பட்ட பெயரை UPI சிஸ்டம் தானாகவே காண்பிக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது மோசடி செய்பவர்கள் சிலர் தங்கள் அடையாளத்தை மறைக்க புனைப் பெயர்களை பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த புதிய விதி மாற்றத்தால் UPI மூலம் நடைபெறும் மோசடி தடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் யுபிஐ செயலிகளில் வரும் இந்த புது அப்டேட் சைபர் கிரிமனல்கள் செய்யும் மோசடிகளை தடுக்க மற்றும் பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் உதவும் நேரடி முயற்சியாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக யுபிஐ யூசர்கள் மொபைல் நம்பர், யுபிஐ ஐடி அல்லது QR கோட் ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் அனுப்பினாலும், பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன் ஸ்கிரீனில் தோன்றும் பெயர், பெறுநரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பெயரை மட்டுமே காட்டும். அதுவும் இந்த மாற்றம் பியர் டு பியர் (Peer to Peer - P2P) மற்றும் பியர் டு பியர் மெர்ச்சன்ட் (Peer to Peer Merchant - P2PM) பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் யுபிஐ பயனர்கள் பரிவர்த்தனைகளைத் தொடங்க மொபைல் எண்கள், UPI ஹேண்டில்ஸ் அல்லது QR கோட்ஸ்களைப் பயன்படுத்தலாம். ஆனால் Send என்பதை கிளிக் செய்வதற்கு முன்பு பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அதிகரித்துவரும் யுபிஐ தொடர்பான மோசடிகளை தடுக்க இது ஒரு புதிய முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜூன் 30-ம் தேதி வரும் இந்த புதிய விதிமுறைகள் மூலம் யுபிஐ செயலிகள் வங்கிப் பதிவுகளிலிருந்து வேறுபடும் தனிப் பயனாக்கப்பட்ட அல்லது யூசர்கள் செட் செய்த பெயர்களைக் காட்ட முடியாது. அதேபோல் இந்த மாற்றம் பிரபலமான பிளாட்ஃபார்ம்கள் உட்பட இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து UPI பேமென்ட் ஆப்ஸ்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்படுகிறது.
யுபிஐ செயலிகளில் கொண்டுவரப்படும் இந்த புதிய அம்சங்கள் அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் யுபிஐ செயலிகளில் இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications