புது Aadhaar ரூல்ஸ் 2025.. இந்த ஆவணங்கள் போதும்.. ஆதார் அப்டேட் செய்யும் முன்பு கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!
குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது என பல்வேறு தேவைகளுக்கு ஆதார (aadhaar) பயன்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்தியாவில் அனைத்து முக்கிய சேவைகளைப் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஆதார் தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆதார் சேர்க்கை மற்றும் ஆதார் அப்டேட் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் எளிதாகவும் மற்றும் நோக்கில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக திருத்தப்பட்ட மற்றும் தெளிவான ஆவணங்களின் பட்டியலை ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது புதிய விதிமுறையின் கீழ் ஆதார் கார்டு உருவாக்க அல்லது ஆதால் கார்டில் ஏதேனும் மாற்றங்களை செய்ய எந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆதார் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், இப்போது பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரம், தண்ணீர் அல்லது எரிவாயு பில்கள் போன்ற ஆவணங்கள் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செல்லுபடியாகும் ஆவணங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர பிறப்புச் சான்றிதழும் செல்லுபடியாகும் ஆவணங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்த ஆவணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2023-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்த இந்திய மற்றும் வெளிநாடு வாழ் இந்திய (NRI) குழந்தைகளுக்கு ஆதார் கார்டு உருவாக்கும் போது பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக ஆதார் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்திற்குப் பிறகு பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் குழந்தைகளின் ஆதார் சேர்க்கை நடைபெறாது.
மேலும் உங்களுடைய ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினத்தை மாற்ற விரும்பினால் அதற்காக பரிந்துரைக்கப்பட்ட செல்லுபடியாகும் ஆவணங்களை நீங்கள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை தொடர்பான மருத்து சான்றிதழ் மற்றும் பள்ளி சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
ஆதார் தொடர்பான சேவைகளை மிகவும் நம்பகமானதாகவும், பாதுகாப்பாகவும், வெளிப்படையாகும் மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாக ஆதார் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. பின்பு இந்த புதிய ஆவணங்களின் பட்டியல் எந்த சான்றிதழ்கள் செல்லுபடியாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்வதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்கள் வழங்கப்பட்டிருந்தால் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்ட முதல் ஆதார் எண் மட்டுமே செல்லுபடியாகும். மற்ற அனைத்து ஆதார் எண்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படும். மேலும் ஆதார் எண்களில் ஏதேனும் பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாவிட்டாலும், முதலில் வழங்கப்பட்ட ஆதார் எண் செல்லுபடியாகும் என்று கருதப்படும்.
குறிப்பாக OCI (Overseas Citizen of India) அட்டைதாரர்கள், வெளிநாட்டினர் மற்றும் நேபாளம் அல்லது பூட்டான் குடிமக்கள் போன்றவர்கள், ஆதார் பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் UIDAI வழங்கிய தேவையான ஆவணங்களின் தனி பட்டியலைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பட்டியல், அவர்களின் தனிப்பட்ட குடியுரிமை நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க.

அதேபோல் ஆதார் அட்டையில் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால் அடுத்த ஆண்டு ஜூன் 14 வரை எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாகச் செய்யலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான (அப்டேட் செய்வதற்கான) கடைசி தேதி முன்பு ஜூன் 14, 2025 என்று தெரிவித்தது.
ஆனால் தற்போது இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது சமீபத்தில் வெளியாகி உள்ள அறிவிப்பில் ஜூன் 14, 2026 வரை ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








