இ-நோட்டீஸ், டபுள் சார்ஜ், VAHAN உடன் லிங்க்.. FASTag யூசர்கள் கவனம்.. சுங்க கட்டணம் வசூலில் புது விதிகள் அமல்!
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பாஸ்டாக் ஆண்டு பாஸ்க்கான (FASTag Annual Pass) கட்டணம் விலை உயரவுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, இந்திய அரசாங்கமானது - தேசிய நெடுஞ்சாலைகளில், குறிப்பாக பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த தவறும் சூழ்நிலைகளில், சுங்க கட்டண வசூலை (Toll collection) கடுமையாக்குவதற்காக புதிய விதிகளை "சத்தமின்றி" அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதென்ன விதிகள்? சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways - MoRTH), ஆனது, 2026 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அறிவித்துள்ளது. இத்திருத்தங்கள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன (கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல்)!

முதல் திருத்தம் - செலுத்தப்படாத பயனர் கட்டணம்: புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ், ஃபாஸ்டாக் போன்ற மின்னணு சுங்க கட்டண வசூல் அமைப்புகள் மூலம், ஒரு வாகனத்தின் பயணம் பதிவு செய்யப்பட்ட பின்னரும் கூட செலுத்தப்படாமல் இருக்கும் சுங்க கட்டண தொகை ஆனது "செலுத்தப்படாத பயனர் கட்டணம்" (Unpaid User Fee) என்று வரையறுக்கப்படும்
இந்த நடவடிக்கை - இந்தியா ஒரு தடையற்ற மற்றும் தடையில்லா சுங்க கட்டண முறைக்கு மாறுவதால், இணக்கத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பில், ஏ.என்.பி.ஆர் (கேமரா அடிப்படையிலான வாகன பதிவு எண் அங்கீகாரம்) மூலம் வாகனத்தின் பயணம் பதிவு செய்யப்பட்ட பின்னரும் கூட சுங்க கட்டணம் செலுத்தப்படாமல் தவறலாம். இது தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஃபாஸ்டாக்கில் குறைந்த லோ டோல் பேலன்ஸ் போன்றவைகள் கூட காரணமாக இருக்கலாம்.
இரண்டாவது திருத்தம் - வசூலுக்கான இ-நோட்டீஸ் முறை: நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க, அரசாங்கம் தொழில்நுட்ப அடிப்படையிலான இ-நோடீஸ் முறையை (E-Notice System) அறிமுகப்படுத்தியுள்ளது. சுங்க கட்டணம் செலுத்த தவறும் வாகன உரிமையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில், மொபைல் ஆப்கள் அல்லது பிரத்யேக இணையதளம் வழியாக எச்சரிக்கைகள் அனுப்பப்படும். இந்த அறிவிப்புகளில் வாகன எண், பயணம் செய்த தேதி மற்றும் இடம், செலுத்த வேண்டிய தொகை போன்ற முக்கிய விவரங்கள் அடங்கியிருக்கும்.
மூன்றாவது திருத்தம் - 72 மணி நேரத்திற்கு பிறகு இரட்டிப்பு கட்டணம்: புதிய விதிகளின்படி, செலுத்தப்படாத சுங்க கட்டண தொகையானது அசல் தொகையை விட இருமடங்காக இருக்கும். இருப்பினும், உரிய நேரத்தில் பணம் செலுத்துவதை ஊக்குவிsப்பதற்காக, பயனர்கள் தங்களது நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு இ-நோடீஸ் வழங்கப்பட்டதிலிருந்து 72 மணி நேர அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த காலத்திற்குள் பணம் செலுத்தப்பட்டால், எந்தவித அபராதமும் இன்றி அசல் சுங்க கட்டண தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.
நான்காவது திருத்தம் - குறை தீர்க்கும் வழிமுறை: அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள் குறை தீர்ப்பதற்கான ஒரு அமைப்பையும் வழங்குகின்றன. தங்களுக்கு தவறாக அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நம்பும் வாகன உரிமையாளர்கள், 72 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். அதிகாரிகள் அத்தகைய வழக்குகளை 5 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். இந்த காலத்திற்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், செலுத்தப்படாத கட்டணத்திற்கான கோரிக்கை தானாகவே காலாவதியாகிவிடும்.
ஐந்தாவது திருத்தம் - வாஹன் தரவுத்தளத்துடனான இணைப்பு: 15 நாட்களுக்கு மேல் நிலுவை தொகை செலுத்தப்படாமல், எந்தவொரு புகாரும் நிலுவையில் இல்லாத சூழ்நிலையில், அந்த தொகை வாஹன் தரவுத்தளத்தில் (VAHAN Database) பதிவு செய்யப்படும். நிலுவையில் உள்ள சுங்க கட்டணம் செலுத்தப்படும் வரை, இது வாகனம் தொடர்பான சேவைகளில் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கலாம்.
OPINION: சுங்க கட்டண முறைகளை வாஹன் தரவுத்தளத்துடன் ஒருங்கிணைப்பது, அமலாக்கத்தை மேம்படுத்தவும், தவறு செய்பவர்களை கண்காணிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, மேற்கண்ட திருத்தங்கள் எல்லாமே சுங்க கட்டண செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும், இணக்கத்தை அதிகரிக்கும், மேலும் நாடு முழுவதும் நவீன, முழுமையான டிஜிட்டல் மற்றும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறையை நோக்கிய மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








