எச்சரிக்கை: இலவச Visa உடன் வெளிநாட்டில் வேலை, மின் கட்டண பாக்கி- மோசடி கும்பலின் நூதன முறை!
சமூகவலைதளங்களில் ஏற்படும் மோசடிகள் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ்அப்பில் தற்போது புதிய வகையான மோசடி தலைதூக்க தொடங்கி இருக்கிறது. அது இலவச விசா மற்றும் வெளிநாட்டில் வேலை என்பது தான். அதுமட்டுமின்றி வடமாநிலத்தில் நடைபெற்ற மின் கட்டண பேரிலான மோசடி தமிழகத்திலும் தலைதூக்க தொடங்கி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்த்து உஷாராக இருக்கலாம் வாங்க.

இலவச விசா உடன் வெளிநாடுகளில் வேலை
இலவச விசா வழங்கி வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சமூகவலைதள பயனர்களை ஏமாற்றும் செயல் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. வெளிநாட்டில் வேலைக்கு செல்ல விரும்புவர்களுக்கு இலவச விசா வழங்குவதாக கூறி மோசடி செயல் நடைபெறுகிறது. மேலும் இந்த செய்தி இங்கிலாந்து அரசாங்கத்தின் தரப்பில் இருந்து அனுப்பப்படுவது போல் தோற்றம் அளிக்கிறது. பரவும் மெசேஜ்கள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

அரசாங்கம் நடத்தும் ஆட்சேர்ப்பு இயக்கம் என போலி தகவல்
2022 ஆம் ஆண்டில் UK-க்கு 1,32,000 க்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், தற்போது மட்டும் 1,86,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அரசாங்கம் ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தி வருவதாக கூறி அரசு பேரில் மோசடி செயல் நடத்தப்பட்டு வருகிறது.

மெசேஜில் இருக்கும் ஒரு லிங்க்
இதுதொடர்பான Malwarebytes அறிக்கையை பார்க்கலாம். வாட்ஸ்அப் மூலமாக பயனர்கள் இந்த தகவலை பெறுகிறார்கள். UK இல் வேலைக்கு செல்லத் தயாராக இருப்பவர்களுக்கு இலவச விசா மற்றும் பிற நன்மைகள் வழங்க தயாராக இருக்கிறோம் என கூறப்படுகிறது. இதில் ஒரு லிங்க் வழங்கப்படுகிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

அரசு தளம் போன்று போலியாக ஒரு தளம்
இந்த மெசேஜில் வரும் லிங்க்கை கிளிக் செய்யும்பட்சத்தில், அரசாங்க தளம் போன்று போலியாக உருவாக்கப்பட்ட ஒரு போலி தளத்திற்கு அனுப்பப்படுகிறது. இதில் UK விசாக்கள் மற்றும் குடிவரவு இணையதளம் என்று போலியாக உருவாக்கப்பட்ட மோசடி டொமைன் காட்டப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்கும் படியும் கேட்கப்படுகிறார்கள். மேலும் "வேலை மற்றும் படிக்க விரும்பும் தனிநபர்கள் மாணவர்கள் இங்கே விண்ணப்பிக்கவும்" எனவும் அந்த தளத்தில் காட்டப்படுகிறது.

விசா, விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடம் இலவசம்
பயனர்கள் பெயர், மின்னஞ்சல், முகவரிகள், தொலைபேசி எண்கள், திருமண நிலை மற்றும் வேலை அனுபவம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மோசடிகள் நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் வேலை அனுமதி, விசா, விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் போன்ற ஆசை வார்த்தைகளை குறிப்பிட்ட ஊழல் சம்பவம் அரங்கேறுகிறது. இந்த மெசேஜ்களை தவிர்க்கும்படி Malwarebytes அறிக்கை பரிந்துரைக்கிறது.

எச்சரிக்கையோடு கையாளுவது மிக அவசியம்
சமூகவலைதளங்களில் இதுபோன்ற தகவல் பரப்பி மோசடி செய்வது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் ஏராளமானோர் பணத்தை இழந்து பட்ட சிரமங்கள் குறித்த செய்திகளை படித்திருப்போம். பிரதான பயன்பாடாக சமூகவலைதளங்கள் மாறி வருகிறது. சமூகவலைதளங்களில் பல அறிவு சார்ந்த தகவல்கள் கிடைக்கிறது. நமக்கு கிடைக்கும் விழிப்புணர்வு தகவலை அனைவரிடமும் பகிர்ந்து எச்சரிக்கையோடு சமூகவலைதளங்களை பயன்படுத்தல் என்பது மிக அவசியம்.

மின் கட்டணம் பேரில் மோசடி
வடமாநிலங்களில் தலை தூக்கியுள்ள மின் கட்டண பில் தொடர்பான மோசடி தமிழகத்திலும் ஆரம்பிக்கத் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மின் கட்டணம் செலுத்தவில்லை எனவும் மின் கட்டணம் பாக்கி இருப்பதாகவும் கூறி இதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பொதுமக்களுக்கு மோசடி நபர்கள் மெசேஜ்கள் அனுப்புகின்றனர். மேலும் அந்த மெசேஜில் ஒரு மொபைல் எண்ணை குறிப்பிடுகின்றனர். இது மின்வாரிய அதிகாரிகளின் மொபைல் எண் எனவும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளும்படியும் மோசடி மெசேஜ்களில் தெரிவிக்கப்படுகிறது.

மெசேஜ்களை நம்பி ஏமாற வேண்டாம்
இந்த எண்ணை தொடர்பு கொண்டால் மின் கட்டணம் பாக்கி இருப்பதாக கூறி மின் இணைப்பை துண்டிக்கப்படுவதை தடுக்க அந்த தொகையை உடனடியாக செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற போலி மெசேஜ்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மெசேஜ்களில் வரும் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் மின்வாரியத்தில் இருந்து இதுபோன்ற போன் அழைப்பு, மெசேஜ் என எதுவும் அனுப்பப்படவில்லை எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications