செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள்.. LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் வரை.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
செப்டம்பர் 1 (September 1) முதல் நாடு முழுவதும் பல புதிய விதிமுறைகள் (New Rules) அமலுக்கு வர உள்ளன. ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல், ஏடிஎம் கட்டணம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்ளிட்ட பல மாற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
போர்டிங் பாஸ் விதிமுறைகள்
வரும் செப்டம்பர் 1 முதல் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இனி போர்டிங் பாஸில் முத்திரை தேவையில்லை. பயணிகள் மொபைலில் உள்ள இ-போர்டிங் பாஸ் அல்லது அதன் பிரிண்ட் நகலைக் காட்டி குடியேற்றச் சோதனையை முடித்துக்கொள்ளலாம். இதனால் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரம் குறைந்து, குடியேற்ற நடைமுறை வேகமாகவும் எளிமையாகவும் இருக்கும்.

FDயில் என்ன மாற்றம் வருகிறது தெரியுமா?
இனி வங்கிகள் ஃபிக்ஸ்ட் டெபாசிட்கள் தொடர்பாக சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. அதாவது புதிய வழிகாட்டுதல்களின்படி, ரூ.3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் தினமும் காலை 10:10 மணிக்குள் தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும். குறிப்பாக இது சிறிய ஃபிக்ஸட் டெபாசிட்களைப் பாதிக்காது. ஆனால் இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பதிலாக, அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
PNG இணைப்புகளை அதிகரிக்க புதிய திட்டம்
செப்டம்பர் 1, 2026 முதல் வீட்டு உபயோகக் குழாய்வழி எரிவாயு (PNG) தொடர்பான புதிய திட்டம் அமலுக்கு வருகிறது. வீடுகளுக்கு PNG இணைப்புகளை அதிகரிக்க மத்திய அரசு ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 1.74 கோடி வீட்டு PNG இணைப்புகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய பகுதிகளுக்கும் PNG குழாய்வழி எரிவாயு வசதி விரிவுபடுத்தப்படும். மேலும், தற்போது பயன்படுத்தப்படாமல் அல்லது கட்டணம் செலுத்தப்படாமல் உள்ள இணைப்புகளையும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கிறது.
சிலிண்டர் விலை
பொதுவாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலேயே செய்யப்படுகின்றன. ஆகவே வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதுவும் சிலிண்டர் விலை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள் சமையலறை பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 1-ம் தேதி 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிணடரின் விலை ரூ.202 குறைக்கப்பட்டது. அதேசமயம் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் e-KYC அப்டேட்
அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான e-KYC சரிபார்ப்பை முடிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது குறிப்பாக IOCL, BPCL, HPCL ஆகிய நிறுவனங்கள் இந்த காலக்கெடுவை ஆகஸ்ட் 23ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன.
ஆகஸ்ட் 31க்குள் e-KYC செய்யாவிட்டால், செப்டம்பர் 1 முதல் அதிக விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆதார் அப்டேட் முக்கியம்
நாட்டில் இதுவரை சுமார் 2 கோடி பள்ளி மாணவர்களின் ஆதார் (Aadhaar) பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில் பால் ஆதார் (Baal Aadhaar) அட்டை வழங்கப்படுகிறது. இந்த வயதில் குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் குழந்தைகள் 5 வயதைக் கடந்ததும் ஆதார் மையத்திற்கு நேரில் சென்று கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்வது அவசியம். அதன்பிறகு, 15 வயதை எட்டும்போது மீண்டும் அவர்களின் ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. குறிப்பாக மாநில அரசுகளுடன் இணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 2 கோடி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த செப்டம்பர், 2025 முதல் ஓராண்டுக்கு பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுவும் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முடியாது. குழந்தைகளைப் பெற்றோர் நேரடியாக அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்று பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றம் வரலாம். குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி ஏடிஎம் பரிவர்த்தனைகள் செய்தால், வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.
ஆகவே ஏடிஎம் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் வங்கியின் புதிய கட்டண விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. செப்டம்பர் 1 முதல் கட்டணங்களில் மாற்றம் உள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications