புது ரூல்ஸ்.. நள்ளிரவு தடை, ஆதார் KYC.. ஆன்லைன் கேம்களுக்கு 7 புதிய கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
நேரடி பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேமிங் துறையை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்தின் கீழ் தமிழ்நாடு அரசானது, ரியல்-மணி கேமிங் தளங்களுக்கான மற்றும் அதை பயன்படுத்துபவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிக ஜிஎஸ்டி விகிதங்களுடன் போராடி வரும் ஆன்லைன் கேமிங் துறைக்கு, தமிழ்நாடு அரசின் புதிய ரூல்ஸ் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் அத்தாரிட்டி (Tamil Nadu Online Gaming Authority) வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, உண்மையான பணம் சம்பந்தப்பட்ட கேமிங் தளங்கள் (Online Games Platforms) நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை "வெற்று மணிநேரமாக" (Blank Hours) இருக்க வேண்டும். அதாவது இந்த 5 மணிநேரத்திற்கு பயனர்கள் லாக்-இன் செய்வது முடக்கப்பட வேண்டும்.

மேலும் தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் அத்தாரிட்டியின் புதிய வழிகாட்டுதல்கள் ஆனது, ரியல்-மணி கேம்களில் சிறார்கள் விளையாடுவதை தடைசெய்கிறது மற்றும் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர பண வரம்புகளை நிர்ணயிக்கும் திறனை பிளேயர்களே நிர்ணயம் செய்துகொள்ளும் வசதி அல்லது அம்சம் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டளையிட்டுள்ளது.
கூடுதலாக, ஒரு பிளேயர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடும் போது, ஆன்லைன் கேமிங் தளங்கள் ஆனது அதுகுறித்த பாப்-அப் எச்சரிக்கை மெசேஜ்களை காண்பிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் அவற்றை காண்பிக்க வேண்டும். மேலும் ரியல-மணி கேமிங் ஆப்கள், இந்த கேம்களில் உள்ள அடிமையாகும் தன்மை பற்றிய எச்சரிக்கை செய்திகளை, அந்தந்த லாக்-இன் பக்கங்களில் "ஆன்லைன் கேமிங் இயற்கையில் அடிமையாக்கும்" என்ற வார்த்தைகளுடன் காண்பிக்க வேண்டும்.
மேலும் பிளேயர்கள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்யும் போதெல்லாம், ஆர்எம்ஜி (RMG) ஆப்கள் ஆனது நிலையான பண வரம்பு மற்றும் இதுவரை அவர்கள் செலவழித்த தொகையை "நியாயமான தடித்த எழுத்துக்களில்" காண்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் அத்தாரிட்டிஉத்தரவிரட்டுள்து.
எல்லாவற்றை விட முக்கியமாக, மேலும் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கும் போது, கேஒய்சி (KYC) சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும் என்றும், ஆரம்ப லாக்-இன் அங்கீகாரத்திற்கு ஆதார் அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) மூலம் இரண்டாவது அடுக்கு சரிபார்ப்பு அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாருக்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும்? தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் அத்தாரிட்டி வெளியிட்டுள்ள இந்த புதிய விதிகள் ஆனது உண்மையான பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களுக்கு மட்டுமே பொருந்தும். இது ஒன்றிய அரசாங்கத்தின் ஐடி சட்டம் 2021 இல் உள்ள கேமிங் திருத்தங்களுக்கு இணங்குகிறது.
அறியாதோர்களுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் என்பது கடந்த ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டில் 5 உறுப்பினர்களை கொண்டு மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையமாகும், இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.டி. நசிமுதீன் தலைமையிலான இந்த ஆணையத்திற்கு - ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்தவும், பதிவுகளை வழங்கவும், உள்ளூர் ஆன்லைன் கேமிங் வழங்குநர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும், ஏதேனும் வாய்ப்புகள் அல்லது கேம்களுக்கு எதிரான புகார்களை தீர்க்கவும் அதிகாரம் உள்ளது.
கடந்த ஏப்ரல் 2023 இல், தமிழ்நாடு அரசாங்கம் ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் போன்ற கேம்களை மாநில ஆன்லைன் சூதாட்டச் சட்டத்தின் கீழ் தடைசெய்தது. அவைகள் ஆன்லைன் கேம்கள் என்று அழைக்கப்பட்டாலும் கூட அவைகள் ஆன்லைன் சூதாட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. பின்னர் நவம்பர் 2023 இல் ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் மீதான தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், இந்த ரியல்-மணி ஆன்லைன் கேம்களுக்கு பயனர்கள் செலவழிக்கும் நேரத்தை ஒழுங்குபடுத்தும் அல்லது வயது வரம்புகளை விதிக்கும் விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் அத்தாரிட்டி ஆனது புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








