மே 1 முதல் புது ரூல்ஸ்.. எஸ்பிஐ முதல் LPG கேஸ் சிலிண்டர் வரை.. என்னென்ன மாறுது.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வங்கி, கிரெடிட் கார்டு, சேமிப்பு கணக்கு மற்றும் சிலிண்டர் விலை போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் மே மாதம் பொதுமக்களின் குடும்ப பட்ஜெட்டை பாதிக்கும் வகையில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. இப்போது மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளை (New rules) இந்த பதிவில் பார்க்கலாம்.
1.எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) தனது இன்ஸ்டா அலர்ட் எஸ்எம்எஸ் சேவைக்கான (Insta Alert SMS service) கட்டணங்களில் திருத்தத்தை அறிவித்துள்ளது. இந்த எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கான புதிய கட்டணங்கள் வருகிற மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

அதாவது வழக்கமாக வங்கி பரிவர்த்தனைகள் நடக்கும்போது, பாதுகாப்பு கருதி நமது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். தற்போது ஒரு குறுஞ்செய்திக்கு 20 காசுகள் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் விரைவில் வரும் புதிய மாற்றத்தின்படி இது 15 காசுகள் மற்றும் ஜிஎஸ்டி ஆகக் குறைக்கப்படும்.
உதாரணமாக நீங்கள் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் அலர்ட்களைப் பெறுகிறீர்கள் என்றால், இதுவரை நீங்கள் 20 ரூபாய் (கூடுதல் ஜிஎஸ்டி) செலுத்தி வந்திருப்பீர்கள். ஆனால் இனி வரும் காலங்களில் அது 15 ரூபாயாகக் குறையும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களால் ஒரு சிறிய அளவிலான தொகையைச் சேமிக்க முடியும்.
ஆனால் மின்னஞ்சல் (Email) வழியாகப் பெறப்படும் அலர்ட்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் இலவசமாகவே இருக்கும் என்று வங்கி நிர்வாக தெளிவுபடுத்தியுள்ளது.
2.ஆன்லைன் விளையாட்டு புதிய விதிமுறைகள்: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிகள் வரும் மே 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. இதில் சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்குப் பதிவு அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 'இ-ஸ்போர்ட்ஸ்' விளையாட்டுகளுக்குக் கட்டாயப் பதிவு அவசியம் ஆகும். குறிப்பாக அரசு தன்னிச்சையாகவோ அல்லது தேவைப்படும்போதோ சில விளையாட்டுகளைக் கண்காணிக்க இந்த புதிய விதிகள் உதவும். மேலும் இதில் பயனர்களின் பாதுகாப்பு அம்சங்களும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த புதிய விதிகள் ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்யும் எனத் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3. எஸ்பிஐ வங்கி: எஸ்பிஐ கிரெடிட் கார்டை (SBI Credit Card) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் அதாவது மே 1-தேதி முதல் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி இதற்கு முன்புவரை தனது வாடிக்கையாளர்களிடம் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைக்கு தாமதக்கட்டணம் (LPC) வசூலிக்கப்படவில்லை. ஆனால் இனி ரூ.100க்கு மேல் மற்றும் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு ரூ.100 தாமத கட்டணம் விதிக்கப்படும்.
அதே ரூ.500க்கு மேல் மற்றும் ரூ.1000 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு, தாமத கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உங்களது நிலுவைத் தொகை ரூ.1000-ஐ தாண்டினால், தாமதக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச நிலுவை தொகையையாவது செலுத்த தவறினால், தாமத கட்டணம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்கு இந்த குறைந்தபட்ச கட்டணத்தை நீங்கள் செலுத்தத் தவறினால், கூடுதலாக ரூ.100 அபராதம் சேர்க்கப்படும். நீங்கள் நிலுவை தொகையைச் செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த கூடுதல் கட்டணம் தொடரும், இதனால் தாமதங்கள் அதிக செலவை ஏற்படுத்தும்.
4.LPG சிலிண்டர் புக்கிங் விதிமுறைகள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதன் உபபொருளான எல்பிஜியின் விலையும் உயர்கிறது. குறிப்பாக தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பதற்றம் காரணமாக Saudi Aramco நிர்ணயிக்கும் விலையில் மாற்றம் ஏறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் சிலிண்டர் விலை உயர வாய்ப்பு உள்ளது.
அதுவும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் வரும் மே 1-ம் தேதி விலை உயர வாய்ப்பு உள்ளதாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதவிர எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது.

அதேபோல் சப்ளையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர ஓடிபி அடிப்படையிலான டெலிவரி முறையை நிரந்தரமாகவும், முழுமையாகவும் கட்டாயமாக்குகிறார்கள். மேலும் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால், அவற்றை இணைக்க அல்லது ஒன்றை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தி வருகிறது. பற்றாக்குறையைச் சமாளிக்க, போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
5.இபிஎப்ஓ புதிய வசதி: வரும் மே மாதம் EPFO-வில் (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) பெரிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது PF கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் அவர்களது PF பணத்தை எடுக்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. அதாவது மே மாதம் பிஎஃப் தொகையை யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications