ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. ஆதார் கார்டு முதல் ரயில் டிக்கெட் வரை.. என்னென்ன மாற்றங்கள்? இதோ முழு விவரம்..
ஆகஸ்ட் மாதம் நாளை முதல் தொடங்குகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை அமலுக்கு வரவுள்ள முக்கிய நிதி மாற்றங்கள், பொதுமக்கள் கவனிக்க வேண்டிய நிதி தொடர்பான அறிவிப்புகள் மற்றும் இந்த மாதத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய நிதி நிகழ்வுகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வருமான வரிக் கணக்குத் தாக்கல்: சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே (ஜூலை 31) கடைசி நாள். அதே நேரத்தில், தணிக்கை (Audit) மற்றும் ITR-3 அல்லது ITR-4 தாக்கல் செய்யும் சுயத்தொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் தகுதியுள்ள சிறு வணிகர்கள் மற்றும் Presumptive Taxation Scheme-ஐ பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலையில் மாற்றம்: ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம்.
அதுவும் சிலிண்டர் விலை உயர்ந்தால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். ஒருவேளை சிலிண்டர் விலை குறைந்தால் வாடிக்கையாளர்களுக்குச் சற்று நிம்மதி கிடைக்கும்.
கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள்: ஆகஸ்ட் 1 (August 1) முதல் பல வங்கிகள் தங்களின் கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றங்களை அமல்படுத்தலாம். இதன் ஒரு பகுதியாக ரிவார்டு பாயிண்டுகள், ஆண்டு பராமரிப்புக் கட்டணம், சேவைக் கட்டணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகளில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதுவும் சில வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களையும் திருத்தலாம். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்தால், அதன் தாக்கம் வீட்டுக் கடன், வாகனக் கடன் EMI-கள் மற்றும் FD வட்டி விகிதங்களிலும் பிரதிபலிக்கக்கூடும்.

ஆதார் விதிகள்: வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆதார் தொடர்பான KYC செயல்முறையிலும் புதிய மாற்றம் வருகிறது. இதன்படி, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள்(Asset Management Companies) KYC 2.0 (CKYC) முறையை அமல்படுத்த உள்ளன.
குறிப்பாக இந்த புதிய முறையால் கணக்கு தொடங்கும்போதோ அல்லது KYC அப்டேட் செய்யும்போதோ, வாடிக்கையாளரின் ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய பதிவேட்டில் உள்ள தகவல்களை நேரடியாக பயன்படுத்த முடியும். எனவே இது நிதி மோசடிகளை எளிமையாகத் தடுக்க உதவும்.
தட்கல் டிக்கெட் புதிய விதிகள்: வரும் ஆகஸ்ட் 1 முதல், ரயில் பயணிகளுக்காக தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய டோக்கன் முறை அறிமுகமாகிறது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் முன்பதிவு மையங்களில் நெரிசல் குறைந்து, பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் பெற முடியும்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில் ரயில் நிலையங்களில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதைத் தவிர்க்க, தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முதலில் டோக்கன் வழங்கப்படும். அதன் பிறகு, டோக்கனில் உள்ள வரிசை எண்ணின் அடிப்படையில் பயணிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவு சீராக மேற்கொள்ளப்படும்.

இந்த புதிய முறையால் முன்பதிவு கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட நேரக் காத்திருப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.
யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி: மிகவும் அதிகம் எதிர்பார்த்த பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் வசதி வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது அதற்கான வேலைகளைச் செய்து வருகிறது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation). குறிப்பாக இந்த வசதி பல்வேறு பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications