புது ரூல்ஸ்.. Aadhaar, PAN, ரேஷன் கார்டு.. இனி Proof ஆக காட்ட முடியாது.. இந்த 2 ஆவணங்கள் தான் செல்லுபடி ஆகும்!
ஒரு நபரின் இந்திய குடியுரிமையை (Indian Citizenship) நிரூபிக்க ஆதார் அட்டை (Aadhaar Card), பான் அட்டை (PAN Card) அல்லது ரேஷன் கார்டு (Ratio Card) இனி செல்லுபடியாகாது என்றும், குடியுரிமைக்கான சான்றாக வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) அல்லது பாஸ்போர்ட் (Passport) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த முடிவு, ஒன்றிய அரசின் (Central government) அறிவுறுத்தல்களின்படி எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் சரிபார்ப்பு பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக வசிக்கும் ஏராளமான வெளிநாட்டினர், குறிப்பாக வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள், ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இந்திய குடியுரிமையை தவறாக கோருவது கண்டறியப்பட்டது.

இந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, "சட்டவிரோதமாக குடியேறிய பலர் ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள், பான் கார்டுகள் மற்றும் யுஎன்எச்சிஆர் (UNHCR - ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர்; United Nations High Commissioner for Refugees) வழங்கிய அட்டைகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்திய குடிமக்களை துல்லியமாக அடையாளம் காண்பதை கடினமாக்கியுள்ளது. எனவே, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது." என்று காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்
டெல்லி காவல்துறை, அனைத்து மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கும் தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மீது கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான பிரச்சாரம் ஆனது ஒவ்வொரு கடைசி நபரும் திருப்பி அனுப்பப்படும் வரை தொடரும் என்றும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இதனுடன், தலைநகரில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுக்கு எதிரான நடவடிக்கையையும் டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, டெல்லியில் சுமார் 3,500 பாகிஸ்தானிய குடிமக்கள் வசிக்கின்றனர், இதில் தோராயமாக 520 முஸ்லிம்கள் உள்ளனர், அவர்களில் 400 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்குத் திரும்பி விட்டனர்.
இந்தியாவில் ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்ற பல அடையாளச் சான்று ஆவணங்கள் உள்ளன. இருப்பினும் இதை ஒருவரின் குடியுரிமையை சரிபார்க்கப் பயன்படுத்த முடியாது என்கிற தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. யுஐடிஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது ஆதார் அட்டையை அடையாளம் மற்றும் வசிப்பிடச் சான்றாகக் கருதுகிறது. ஆனால் குடியுரிமைச் சான்றாகக் கருதுவதில்லை.
பான் மற்றும் ரேஷன் கார்டுகளுக்கும் இது பொருந்தும். பான் கார்டுகள் வரி நோக்கங்களுக்காக சேவை செய்கின்றன, மேலும் ரேஷன் கார்டுகள் உணவு விநியோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆக இந்த இரண்டும் கூட குடியுரிமையை உறுதிப்படுத்தாது .
குடியுரிமைச் சான்று கட்டாயமாக இருக்கும் சூழ்நிலைகளில், எடுத்துக்காட்டாக, அரசு வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் வழங்குதல் அல்லது நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல் - ஆகிய சூழ்நிலைகளில் இத்தகைய ஆவணங்களை வைத்திருப்பது இனி மிகவும் அவசியமாகிறது. இந்த நேரத்தில் பிறப்பு மற்றும் இருப்பிடப் பதிவுகள் முறையாக புதுப்பிக்கப்படுவதை குடிமக்கள் உறுதி செய்வது புத்திசாலித்தனம்.
குடியுரிமை ஆவணங்கள் இல்லாத நிலையில், சட்டம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளைத் தவிர்க்கவும், ஒருவரின் குடியுரிமை நிலையை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தவும், பிறப்பு மற்றும் இருப்பிடப் பதிவுகளுக்கு பொறுப்பான தொடர்புடைய நகராட்சி அல்லது மாநில அதிகாரிகளை நாடவும்.


Click it and Unblock the Notifications








