சார்.. ரொம்ப நன்றி சார்.. BSNL 4G-யின் அறிமுக தேதியை அம்பலப்படுத்திய அரசு அதிகாரி!
நாடு முழுவதும், மிகவும் வேகமாக 5ஜி சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டரான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் 4ஜி சேவைகள் (4G Service) எப்போது அறிமுகமாகும் என்கிற கேள்விக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்துள்ளது போல் தெரிகிறது.
அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், "பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது. அதன் கீழ் டிசிஎஸ் (TCS) நிறுவனமானது சுமார் 50 தளங்களுக்கான உபகரணங்களை வழங்கியுள்ளது. மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில், சுமார் 100 தளங்களை சென்றடைவோம் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.

BSNL 4G சேவை சரியாக எப்போது அறிமுகமாகும்?
மேலும் அவர், "எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், பிஎஸ்என்எல் 4ஜி சேவையின் வணிக வெளியீடானது வருகிற ஏப்ரல் 2023 இல் நடக்கும்" என்றும் கூறியுள்ளார். முன்னதாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையானது 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இது, சற்றே முன்னதாக வெளியாகும் என்பது போல் தெரிகிறது.
மார்ச் மாத தொடக்கத்தில் அனுமதி.. அதன் பின்னர்?
ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, முதலில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 200 தளங்களுக்கான உபகரணங்களை ப்ரீ-ஆர்டர் செய்யும். அவைகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்களில் பிஎஸ்என்எல் 4ஜி-ஐ அறிமுகப்படுத்தப் பயன்படும். அந்த மாவட்டங்கள்: ஃபெரோஸ்பூர், அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட்.
மேலும் இந்திய தொலைத்தொடர்பு துறையானது (Department of Telecommunications - DoT) இந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே அமைச்சர்கள் குழுவிடம் அனுமதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் 1 லட்சத்திற்கும் அதிகமான தளங்களுக்கான 4ஜி உபகரணங்களுக்கான கொள்முதல் ஆணை, டிசிஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படலாம்.
இனிமேல் BSNL-க்கு நல்ல காலம் தான்!
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியவுடன் அதன் வருவாய் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. மேலும் 2026 - 2027 நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மறுமலர்ச்சி தொகுப்பும் (Revival package) கிடைக்கும் என்பதால், பிஎஸ்என்எல்-க்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
4ஜி மட்டுமல்ல BSNL 5ஜி சேவையும் அறிமுகமாகும்!
நினைவூட்டும் வன்ணம் கடந்த 2022 ஆம் ஆண்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசாங்கத்தின் மறுமலர்ச்சி தொகுப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகுப்பின் மதிப்பு ரூ.1.64 லட்சம் கோடி ஆகும். இந்த தொகுப்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடனை மறுகட்டமைப்பது மற்றும் 4ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கு உதவும்.
அதுமட்டுமன்றி, இந்த நிதி பிஎஸ்என்எல் 5ஜி வெளியீட்டுக்கும் உதவும். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி நெட்வொர்க்கில் இருந்து 5ஜி-க்கு மேம்படுத்தக்கூடிய வகையிலான உபகரணங்களை வாங்கவும் பயன்படுத்தப்படும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகமாகி விட்டது மற்றும் 80 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏர்டெல் 5ஜி அறிமுகமாகி விட்டது!


Click it and Unblock the Notifications








