ரேஷனில் புதிய மாற்றம்.. குடும்ப அட்டை கைரேகை போதும்.. மகளிர் உரிமை தொகை.. பழைய அட்டை தாரர்களுக்கு என்னவாகும்?
மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காக புதிதாக விண்ணபிக்கப்பட்ட ரேஷன் கார்டுகளின் விநியோகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வேளையில் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கும் முறையில் மிகப்பெரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்துமா?
தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் முக்கியமாக இருக்கின்றன. ஏற்கனவே, ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் குடும்ப தலைவிகள் இந்த தொகையை எளிதாக பெற்று கொள்ளலாம். ஆனால், உரிமைத் தொகை பெற தகுதி இருந்தும் ரேஷன் கார்டு இல்லையென்றால், அவர்கள் புதிய ரேஷன் கார்டு பெறும் வரையில் அந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியாது.

இதனால், புதிய ரேஷன் கார்டுக்கு (New Ration Card) விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில், ஏற்கனவே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, செல்போனில் எஸ்எம்எஸ் வந்தும், அட்டை கையில் வராததால், அந்த தொகையை பெற்று கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு நம்பிக்கை அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்ன? பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் பெற்று கொள்ளும் வகையில், புதிய ரேஷன் கார்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.
ஆனால், தற்போதுள்ள ரேஷன் கார்டுகளில் புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய பயனாளிகளின் எண்ணிக்கையில் சமநிலையை கொண்டுவரும் நோக்குடன் புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட ரேஷன் கார்டுகளின் விநியோகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும், வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் மட்டும் 27,577 ரேஷன் கார்டுகள் தடையின்றி வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டதில் தகுதியுடைய 45,509 பேருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த புதிய ரேஷன் கார்டு உறுப்பினர்களுக்கு அவர்கள் கொடுத்த செல்போன் நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. எஸ்எம்எஸ் பெற்ற உறுப்பினர்கள் ரேஷன் கார்டு பெற தகுதியுடையவர்களாவர். ஆகவே, அவர்கள் புதிய ரேஷன் கார்டுகளை பெற வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர் யார் வேண்டுமானாலும் சென்று ரேஷன் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் ஆக்டிவேட் செய்யப்பட் ரேஷன் கார்டுகள் கையில் வரவில்லை என்றாலும், தங்களுக்குரிய நியாய விலைக் கடைகளுக்கு சென்று உங்களுக்கு எஸ்எம்எஸ்களில் அனுப்பப்பட்ட ரேஷன் கார்டு எண்ணை கடைப் பணியாளரிடம் கொடுத்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை பெற்று கொள்ளலாம். இதற்கு உங்களுக்கு விரல் ரேகை சரிபார்ப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, புதிய ரேஷன் கார்டை பெற தாமதமானாலும் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டால் போதும், விரல் ரேகை மூலம் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். அதே நேரத்தில் பழைய கார்டு உறுப்பினர்கள் கைரேகை மூலம் மட்டுமே பொருட்களை வாங்க முடியாது. வரும் நாட்களில் அந்த மாற்றம் கொண்டு வரப்படலாம்.
மேற்கண்ட 45,509 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட இருப்பதால், அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர். ஆகவே, வட்ட வழங்கல் அலுவலகங்களில் புதிய ரேஷன் கார்டுகளை பெற்ற பிறகு, தமிழ் நாடு அரசு விண்ணப்பங்களை ஏற்கும் அறிவிப்பை வெளியிட்ட உடன் மகளிர் உரிமை தொகைக்கு (Magalir Urimai Thogai) விண்ணப்பித்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








