புது ரூல்ஸ்.. மே 1 முதல் அமல்.. இனி ரயிலில் இப்படி பயணம் செய்ய முடியாது.. இதோ முழு விவரம்..
இந்திய ரயில்வே அமைப்பு (Indian Railways) தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது, அதேபோல் புதிய விதிமுறைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்களில் பயணம் செய்யும் மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் ரயில்களில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே ஒரு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி காத்திருப்பு டிக்கெட்டுகள் (waiting list tickets) உள்ள பயணிகள் இனிமேல் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்க முடியாது. ஒருவேளை இனி யாரிடமாவது காத்திருப்பு டிக்கெட் இருந்தால், அவர்கள் பொது வகுப்பு பெட்டியில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய ரயில்வே மே 1 (May 1) முதல் இந்த விதிமுறையை அமல்படுத்தக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐஆர்சிடிசி (IRCTC) மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட் உறுதிப்படுத்தப்படவிட்டால் அது தானாகவே ரத்து செய்யப்படும். பின்பு இதுபோன்ற சூழ்நிலையில் தான் பலர் டிக்கெட் கவுண்டரில் இருந்து காத்திருப்பு டிக்கெட்டுகளை எடுத்து ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்பிறகு ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் பயணம் செய்வது முழுமையாகத் தடை செய்யப்படும். அதேசமயம் எந்தவொரு பயணிக்கும் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட் இருப்பது கண்டறியப்பட்டால் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது பொது பெட்டிக்கு அனுப்பலாம்.
முன்பு கூறியபடி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் பயணிக்கும் மக்களின் வசதிக்காகத் தான் இந்த விதிமுறை உருவாக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதுவும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள் தங்கள் பயணத்தில் போது காத்திருப்பு டிக்கெட்டுகளை கொண்ட பயணிகளால் எந்தவித பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று இந்திய ரயில்வே அமைப்பு கூறியுள்ளது.
சில சமயங்களில் காத்திருப்பு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகளின் இருக்கைகளில் அமர முயற்சிக்கின்றனர். இது அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த சிரமத்தைப் போக்கத் தான் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி யாராவது காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் ரயில்களில் பயணம் செய்தால் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் சமீபத்தில் இந்தியாவில் முதல் முறையாக நாசிக் அருகே உள்ள மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் (Panchavati Express) ரயிலில் ஏடிஎம் (ATM) இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏடிஎம் இயந்திரம் பஸ் நிலையம், ரயில் நிலையில் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும்.
தற்போது முதல் முறையாக மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப் பெட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. அதுவும் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாகப் பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கு அறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் தான் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருப்பதால் ஏடிஎம் இயந்திரத்தை மக்கள் எளிதில் அணுக முடியும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதுபோன்ற ஏடிஎம் வசதி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








