PF பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. அரவு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎஃப்ஓ (EPFO) தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதுவும் இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் விதிகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் PF கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ஓய்வுபெற உள்ள பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்துகொள்வது நல்லது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, மக்களவையில் PF பணத்தை எடுப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, வருங்கால வைப்பு நிதியின் புதிய விதிமுறைகள் குறித்து முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டார். குறிப்பாக, பணியில் இருந்து விலகிய பிறகு ஊழியர்கள் தங்களின் முழுமையான PF தொகையைப் பெறுவதற்கான காலக்கெடு தொடர்பாக புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி ஒருவர் வேலையை விட்டு விலகிய உடனேயே முழு PF தொகையையும் பெற முடியாது. முழுத் தொகையையும் திரும்பப் பெறுவதற்கு 12 மாதங்கள், அதாவது ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, பணியை விட்டு வெளியேறியவர்கள் அல்லது பணி ஓய்வை எதிர்நோக்கி இருப்பவர்கள், முழுமையான PF தொகையை பெறுவதற்கு இந்த புதிய காலக்கெடுவை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஊழியர்களின் ஓய்வூதிய திட்டமான EPS (Employees' Pension Scheme)-ல் உள்ள பணத்தை எடுப்பதற்கு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர தேவைகளுக்காக PF கணக்கில் இருந்து பணம் எடுக்க ஊழியர்களுக்கு அனுமதி உள்ளது. இதற்காக பணம் எடுக்கும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களின் PF கணக்கில் உள்ள பணத்தில் 75% வரை அவசர தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளலாம். இதற்காக எந்த காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்த தொகையை ஒரு ஆண்டில் இரண்டு முறை வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் வீடு கட்டுதல், மருத்துவ அவசரச் செலவுகள், கல்வி மற்றும் வேலையின்மை போன்ற முக்கிய தேவைகளுக்காக PF பணத்தை ஊழியர்கள் முன்னுரிமை அடிப்படையில் பெறலாம். இந்த காரணங்களுக்காக விண்ணப்பிக்கும் போது, பணத்தை விரைவாகப் பெறும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த புதிய மாற்றங்கள் மத்திய அறங்காவலர் குழுவின் 238-வது கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள், முதலாளிகள் சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பரிந்துரைகள் செய்யப்பட்ட பின்னரே புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய PF விதிகள் குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பணத்தை விரைவாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக EPFO 3.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், UPI மற்றும் ATM மூலம் PF பணத்தை எளிதாகவும் விரைவாகவும் எடுத்துக்கொள்ளும் வசதி கிடைக்கும்.
குறிப்பாக PF கணக்கில் உள்ள முழு பணத்தையும் எடுக்க ஓராண்டு காத்திருக்க வேண்டும். ஆனால், அவசரத் தேவைக்கு 75% வரை பணத்தை எடுக்கலாம். ஊழியர்களின் ஓய்வுகால பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications