ரயில் டிக்கெட் புக்கிங் இனி ஈஸி.. ஜூலை 15 முதல்.. IRCTC இணையதளத்தில் அதிரடி மாற்றம்.. இதோ முழு விவரம்..
இந்தியா முழுவதும் IRCTC இணையதளத்தைப் பல லட்சம் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் புதிய வசதிகள் கொண்டுவரப்பட உள்ளது. அதுவும் நவீன ஏஐ தொழில்நுட்பங்களுடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளம் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை மாணவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, கேப்ட்சா (Captcha) சரிபார்ப்பு செயல்முறை அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அடிக்கடி இணையதளம் முடங்குவதால் டிக்கெட் முன்பதிவில் பெரும் சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜூலை 15 முதல் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவித்தார். பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தளத்தில் பல்வேறு மேம்பட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பக் கோளாறுகள், இணையதளம் முடங்குவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், டிக்கெட் முன்பதிவில் தற்போது நிலவும் தாமதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு, முன்பதிவு செயல்முறை வேகமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி வந்த 'கேப்ட்சா' (Captcha) சரிபார்ப்பு முறையும் மேம்படுத்தப்பட்டு, பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், டிக்கெட் முன்பதிவின்போதே அந்த டிக்கெட் உறுதியாக கிடைக்குமா அல்லது காத்திருப்புப் பட்டியலில் செல்லுமா என்பதை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக கணித்து காட்டும் புதிய வசதியும் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தினாலும் தடையின்றி செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சர்வர்களின் திறன் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், நிமிடத்திற்கு சுமார் 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் திறன் இந்த தளத்திற்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் எளிதாக பயன்படுத்தும் வகையில் நவீன வடிவமைப்பு மற்றும் எளிமையான Navigation வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கையைத் தேர்வு செய்யும் வசதி, ரயில் முன்பதிவு தொடர்பான தகவல்களை தெளிவாக அறியும் வசதி உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இதில் இடம்பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சுமார் 88 சதவீத ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக, தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அறிமுகமான பிறகு டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று, லட்சக்கணக்கான பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் என்று ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் புதிய ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications