Google Pay, PhonePe பீதி.. இனி ரூ.1000 க்கு மேல் UPI வழியாக பணம் அனுப்பினால் கட்டணமா? RBI, NPCI விளக்கம்!
கடந்த சில நாட்களாக, யுபிஐ (UPI) வழியாக ரூ 1,000 க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால் கட்டணம் விதிக்கப்படும் என்று பயனர்களை எச்சரிக்கும் மெசேஜ்களும், சோஷியல் மீடியா பதிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது தங்கள் மாதாந்திர செலவுகளை செலுத்த, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து அரசாங்கம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
யுபிஐ பயனர்களுக்கு கட்டணமா? இந்திய அரசும் என்பிசிஐ-யும் (NPCI), பரிவர்த்தனை தொகையை பொருட்படுத்தாமல், யுபிஐ பரிவர்த்தனைகள் ஆனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் போல கட்டணமின்றி இருக்கும் என்று அறிவித்துள்ளன. மேலும் இப்போதைக்கு யுபிஐ கட்டணங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.100. ரூ.1000 அல்லது ரூ.10,000 அனுப்பும்போது நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலிக்குமா? இந்த வார தொடக்கத்தில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி, யுபிஐ கட்டணங்கள் குறித்த ஊகங்கள் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியது.
ஆனால் ஆர்பிஐ ஆனது - ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் (Payment systems) ஆனது செயல்பாட்டு செலவுகளை (Operational costs) மீட்டெடுக்கும் அளவிற்கு செலவு குறைந்தவையாக (Cost-effective) இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், எப்போது கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு என்பிசிஐ வரம்பு வைத்துள்ளதா? என்பிசிஐ-யின் படி, யுபிஐ வழியிலான பண பரிமாற்றங்களுக்காக பயனர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. இருப்பினும், பின்வரும் சந்தர்ப்பங்களில் கட்டணங்கள் விதிக்கப்படும்: உங்கள் வங்கி கணக்கிலிருந்து ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) அல்லது வாலெட்டுகள் என்று பிரபலமாக அறியப்படும் டூலுக்கு நீங்கள் பணம் அனுப்பும்போது, பரிவர்த்தனைத் தொகை ரூ.2,000-க்கு மேல் இருந்தால் கட்டணம் இருக்கும். மேலும், இந்த கட்டணங்களை வணிகர்களே ஏற்பார்கள், வாடிக்கையாளர்கள் அல்ல.
யுபிஐ-யில் ரூ.1 லட்சம் பரிவர்த்தனை வரம்பு உள்ளதா? ஆம்! பெரும்பாலான யுபிஐ பேமண்ட்களுக்கு தினசரி ரூ.1 லட்சம் என்கிற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவமனைகள் அல்லது பள்ளிகள் போன்ற சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு, இந்த வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், யுபிஐ அமைப்பு சீராகச் செயல்படுவதற்கும் இந்த வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், நீங்கள் ரூ.1 லட்சம் வரம்பை தாண்டினால் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதல்ல!. நீங்கள் யுபிஐ பயன்படுத்தி ஒருவருக்கு பணம் அனுப்பினால், எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
OPINION - யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணங்கள் பற்றிய வதந்திகள் ஏன் அடிக்கடி வலம் வருகின்றன? என்பிசிஐ ஆனது வணிகர்களிடமிருந்து பேமண்ட்களுக்காக ஒரு பரிமாற்ற கட்டணத்தை வசூலிக்கிறது. சில வணிகர்கள், தங்கள் சேவையில் யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் அடங்கும் என்கிற மெசேஜை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறார்கள்.
இந்த மெசேஜ் அல்லது தகவல் - மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது; யுபிஐ-க்கு கட்டணம் என்கிற தவறான கருத்து பரவுகிறது. 2026 இல் தவறான தகவல்கள் ஏன் மிக விரைவாக பரவுகிறது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. இக்காலத்தில் எல்லோருமே "நியூஸ் சேனல்" போல செயல்படுகிறார்கள். ஆக எந்த தகவல் கிடைத்தாலும் உடனே நாம் பீதியடைய வேண்டாம். ரிசர்வ் வங்கி, என்பிசிஐ அல்லது அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை எல்லாமே தவறான / போலியான தகவல்கள் தான்!


Click it and Unblock the Notifications








