FASTag கட்டணத்தில் திடீர் மாற்றம்.. யாரெல்லாம் 2 மடங்கு பணம் செலுத்த வேண்டும்? தப்பிப்பது எப்படி?
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) ஆனது ஃபாஸ்டாக் (FASTag) கட்டணம் தொடர்பான முக்கிய மாற்றம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 2025 நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த மாற்றத்தின் கீழ் - செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் (Valid FASTag) மற்றும் செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டாக் (Functional FASTag) இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் (Toll plaza) நுழையும் வாகனங்களுக்கான - தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (National Highways Fee) திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

அதாவது நவம்பர் 15, 2025 முதல், ஃபாஸ்டாக் பயன்படுத்தாத வாகன உரிமையாளர்கள் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தி பணம் செலுத்த தேர்வுசெய்யும்போது வழக்கமான சுங்கத்தொகையை விட 1.25 மடங்கு அதிகம் செலுத்த வேண்டும். இந்த தொகை ரொக்கமாக செலுத்துபவர்களை விட ஒப்பீட்டளவில் குறைவு ஆகும்
அறியாதோர்களுக்கு - ரொக்கமாக செலுத்தினால், செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் இல்லாத வாகன உரிமையாளர்கள் பொருந்தக்கூடிய பயனர் கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டும். ஆக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ள இந்த மாற்றம் - யுபிஐ வழியாக பணம் செலுத்துவோர்களுக்கு லாபகரமான வழியாக இருப்பதோடு சேர்த்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.
இதுகுறித்த அறிக்கையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆனது - தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பயனர் கட்டண மையங்களில், டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிப்பதற்கும், ஃபாஸ்டாக் அல்லாத பயனர்கள் மத்தியிலான ரொக்க பரிவர்த்தனைகளை நீக்குவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூல்) விதிகள் 2008 திருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும் திருத்தப்பட்ட விதிகள் ஆனது டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தையும் கணிசமாக மேம்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை, செபி என்கிற இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது வேலிட் யுபிஐ ஐடிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அமைப்பின் கீழ், 2025 அக்டோபர் 1 ஆம் தேதி முதல், செபியில் பதிவு செய்யப்பட்ட தரகர்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பிற முதலீட்டாளர் எதிர்கொள்ளும் இடைத்தரகர்களின் யுபிஐ ஐடிகள் பிரத்யேக "@valid" ஹேண்டில்களை கொண்டிருக்கும்.
இந்த பிரத்யேக யுபிஐ ஹேண்டில்கள் ஆனது என்பிசிஐ (NPCI) என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (National Payments Corporation of India) வழங்கப்பட்டவைகள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் ஒவ்வொரு யுபிஐ ஐடியும் தரகர்களுக்கு ".brk" மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு ".mf" போன்ற வகை-குறிப்பிட்ட பின்னொட்டுகளை (Category-specific suffixes) உள்ளடக்கியிருக்கும்.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் சட்டப்பூர்வ நிறுவனங்களை (Legitimate entities) மிகவும் எளிமையான முறையில் அடையாளம் காண முடியும். உதாரணமாக, ஒரு தரகரின் ஐடி abc.brk@validhdfc ஆக தோன்றலாம், அதே நேரத்தில் ஒரு மியூச்சுவல் ஃபண்டின் யுபிஐ ஐடி ஆனது xyz.mf@validicici ஆக இருக்கலாம்.
பெரும்பாலான முதலீட்டாளர்களையும், அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளையும் உள்ளடக்கிய 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தரகர்கள் ஏற்கனவே இந்த புதிய ஹேண்டில்-ஐ ஏற்றுக்கொண்டுள்ளதாக செபி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஐடிகள் மூலம் செய்யப்படும் பணம் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த - பச்சை நிற முக்கோணத்திற்குள் தம்ப்ஸ்-அப் (Thumbs-up inside a green triangle) என்கிற தனித்துவமான ஐகான் காண்பிக்கப்படும். இதன் கீழ் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








