பிப்.1 முதல் எல்லாமே மாறுது.. கார், ஜீப், வேன் ஓனர்களுக்கு புது ரூல்ஸ்.. இனி சிரமம் இருக்காது.. விவரம் இதோ..
நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பயண நேரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கவும் ஃபாஸ்டாக் (FASTag) கட்டண முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஃபாஸ்டாக் வசதி ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
இந்நிலையில் ஃபாஸ்டாக் (FASTag) முறையை மேலும் எளிதாக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான புதிய ஃபாஸ்டாக்குகளுக்கு ' Know Your Vehicle' (KYV) சரிபார்ப்பு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதன் மூலம் ஃபாஸ்டாக் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் எந்தவித தாமதங்கள் இருக்காது. ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கும் சிரமங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புகார்கள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை ஃபாஸ்டாக் வழங்கப்பட்ட பிறகு வாகனத்தைச் சரிபார்க்க KYV கட்டாயமாக இருந்தது.
அதாவது தற்போது இந்த சரிபார்ப்புக்கு RC ஆவணத்தைப் பதிவேற்றம் செய்வது, புகைப்படங்களை அனுப்புவது மற்றும் ஏற்கனவே சரியான ஆவணங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் சரிபார்ப்பது போன்ற தேவை இருந்தது. இதனால் ஃபாஸ்டாக் செயல்படுத்துவதில் தாமதமும் அதிக சிரமமும் ஏற்பட்டது. ஆனால் இனிமேல் இந்த சரிபார்ப்பு பொறுப்பு வங்கிகளிடம் ஒப்படைக்கப்படும். ஃபாஸ்டாக் வழங்குவதற்கு முன்பே வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வங்கிகளே சரிபார்க்கும்.
மேலும் வாகன சரிபார்ப்பு VAHAN தரவுத்தளத்தின் மூலம் நடைபெறும். ஒருவேளை VAHAN தரவுத்தளத்தில் தகவல் கிடைக்கவில்லை என்றால், RC ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஃபாஸ்டாக்கை சரியான வாகனத்துடன் இணைக்கிறோமா என்பதையும், தவறான அல்லது நகல் ஃபாஸ்டாக்குகள் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய KYV ஒரு கூடுதல் சரிபார்ப்புப் படியாக இருந்தது. ஆனாலும் இந்த சரிபார்ப்பு முறை தாமதங்களையும் தொழில்நுட்ப சிக்கல்களையும் ஏற்படுத்தியதால் இப்போது அந்த செயல்முறை நீக்கப்பட்டுள்ளது. ஆகவே வரும் பிப்ரவரி 1 முதல் புதிய கார், ஜீப், வேன்களுக்கு KYV கட்டாயமில்லை. தேவையான அனைத்துச் சோதனைகளும் ஃபாஸ்டாக் வழங்குவதற்கு முன்பே முடிக்கப்படும்.
அதேபோல் ஏற்கனவே ஃபாஸ்டாக் வைத்திருப்பவர்கள் இனி வழக்கமான KYV செய்யத் தேவையில்லை. ஒருவேளை ஃபாஸ்டாக் தவறான வாகனத்துடன் இணைக்கப்பட்டாலோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது முறையற்ற முறையில் வழங்கப்பட்டாலோ புகார்கள் எழும்போது மட்டுமே மீண்டும் சரிபார்ப்பு தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பிப்ரவரி 1 முதல் வருகிற இந்த புதிய மாற்றம் வாகன உரிமையாளர்களுக்குப் பெரிய அளவில் பயனளிக்கும். மேலும் ஃபாஸ்டாக் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் செயல்முறை இப்போது முன்பை விட வேகமாகவும் எளிதாகவும் இருக்கும். குறிப்பாக ஃபாஸ்டாக் கிடைத்தவுடன் உடனடியாகப் பயன்படுத்த முடியும். மீண்டும் மீண்டும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவோ அல்லது வங்கிக்கும் வாடிக்கையாளர் சேவைக்கும் செல்ல தேவை இருக்காது.
முன்பு கூறியபடி இதில் புகார்கள் வந்தால் மட்டுமே கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும். இதனால், பயனர்கள் தேவையற்ற சிரமங்களிலிருந்து விடுபடுவார்கள். இனி வங்கிகளே அனைத்து விவரங்களையும் சரிபார்த்து ஃபாஸ்டாக்கை வழங்கும் என்பதால் இது ஃபாஸ்டாக் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








