புது FASTag பாஸ் அறிமுகம்.. 200 ட்ரிப்.. 1 வருடம் வேலிடிட்டி.. விலை ரூ.3000.. எப்போது முதல் அமலுக்கு வரும்?
இந்திய அரசாங்கம் ஆனது ஃபாஸ்டாக் (FASTag) அடிப்படையிலான வருடாந்திர பாஸை (Annual Pass) அறிமுகப்படுத்துவதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் (Transport and Highways Minister) ஆன நிதின் கட்கரி (Nitin Gadkari) அறிவித்துள்ளார். இந்த வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸின் விலை ரூ.3,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் இந்த வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸ் ஆனது வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் இது செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் (1 Year) அல்லது 200 பயணங்கள் (200 trips) வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

"வருடாந்திர பாஸ் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை செயல்படுத்தும். செயல்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கான பிரத்யேக இணைப்பு விரைவில் ராஜ்மார்க் யாத்ரா செயலியிலும், என்எச்ஏஐ (NHAI) மற்றும் மோர்த் (MoRTH) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் இந்த புதிய கொள்கை 60 கிமீ வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்கிறது மற்றும் சிங்கிள், மலிவான பரிவர்த்தனை மூலம் சுங்கக் கட்டணங்களை எளிதாக்குகிறது. காத்திருப்பு நேரங்களை குறைப்பதன் மூலமும், நெரிசலை குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சச்சரவுகளை குறைப்பதன் மூலமும், மில்லியன் கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் மென்மையான பயண அனுபவத்தை வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைப் பயணத்தை மிகவும் தடையற்றதாகவும், சிக்கனமாகவும் மாற்றக்கூடிய ஒரு புதிய சுங்கச்சாவடி கொள்கையில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் பேச்சுக்கள் எழுந்தது. அப்போது இரண்டு வகையான புதிய ஃபாஸ்டாக் பாஸ்கள் பற்றிய வதந்திகள் இருந்தன: முன்மொழியப்பட்ட கொள்கையின்படி (New Proposed Policy Regarding FASTag), வாகன உரிமையாளர்களுக்கு பாஸ்டாக் கட்டணம் தொடர்பாக 2 ஆப்ஷன்கள் இருக்கும்
ஒன்று - வாகன உரிமையாளர்கள் வருடாந்திரமாக ரூ.3,000 செலுத்தும் முறையை (One-time annual payment of Rs.3000) தேர்வுசெய்யலாம். இது ஓட்டுநர்கள் ஆண்டு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் வரம்பற்ற தூரம் பயணிக்க அனுமதிக்கும். அதாவது ரூ.3000 மதிப்பிலான "ஒரு ஆண்டு பாஸ்" முறை அமலுக்கு வந்த பின்னர், இந்தியா முழுவதும் பயணிக்க அனுமதிக்கும் பாஸ்டாக் ரீசார்ஜ்களுக்கு அவசியம் இருக்காது என்று கூறப்பட்டது.
இரண்டாவது - தூரம் அடிப்படையிலான விலை நிர்ணயம் (Distance Based Pricing) இருக்கும். இது 100 கிமீ-க்கு ரூ.50 என்கிற நிலையான கட்டணத்துடன், ஒவ்வொரு பயணத்திற்கும் ஏற்ற மாதிரியான விலை நிர்ணயத்தை கொண்டிருக்கும். இது அடிக்கடி பயணம் செய்யாதவர்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ரூ.3000 மதிப்புள்ள வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸ் அறிமுகம் செய்யப்பட்டு, 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
புதிய அமைப்பு ஏற்கனவே உள்ள ஃபாஸ்டாக் உள்கட்டமைப்பையே பயன்படுத்தும், ஆனால் காலப்போக்கில் தடையற்ற பயணத்திற்காக, ஜிபிஎஸ் மற்றும் தானியங்கி வாகன கண்காணிப்பை நம்பியிருக்கும் சென்சார் அடிப்படையிலான வசூல் அமைப்புகளுடன் சுங்கச்சாவடிகளை மாற்றும்!


Click it and Unblock the Notifications








