இந்த தளர்வு ஊரடங்கில் யாருக்கெல்லாம் இ-பாஸ் கட்டாயம்.. இ-பாஸ் இணையதளம் சரி செய்யப்பட்டதா?
கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட இந்த ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்த்தப்பட்ட ஊரடங்கில் முக்கிய காரணங்களுக்காக வெளியில் வர வேண்டிய மக்கள் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 24ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த முழு ஊரடங்கு
கடந்த மே 24ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த முழு ஊரடங்கின் போது திருமண நிகழ்வுகள், இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. திருமணத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னர், அதிகமானோர் இ-பாஸ் விண்ணப்பிக்கத் துவங்கிய காரணத்தினால் அதற்கும் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

ஊரடங்கில் சில புதிய தளர்வுகள்
தற்பொழுது ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதிகமானோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கத் துவக்கியுள்ளனர்.தற்போதைய தளர்வுகளின் படி, வெளி இடங்களுக்குச் சென்று வேலை செய்வோர், சுயதொழில் செய்வோர், சிறிய கடைகளைத் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இ-பாஸ் இணையத்தளத்தில் சில புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் இ-பாஸ் எடுக்க அனுமதி உண்டு?
யாருக்கெல்லாம் இந்த தளர்வின் போது இ-பாஸ் எடுக்க அனுமதி உண்டு என்று தெரிந்துகொள்ளலாம். முக்கிய வேலைகளை நேரில் சென்று செய்து முடிக்க வேண்டியவர்கள் மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்கும் படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மற்றவர்கள் வீட்டில் இருந்து பாதுகாப்பாக வேலையை செய்து முடிக்கும் படி கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

இவர்கள் எல்லாம் இ-பாஸிற்கு விண்ணப்பிக்கலாம்
சரி இப்போது யாரெல்லாம் இ-பாஸிற்கு விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். புதிய தளர்வுகள் படி, எலக்ட்ரீசியன், பிளம்பர், மின்னணு பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள் போன்றவர்கள் இ-பாஸ் இணையதளத்திற்குச் சென்று அவர்களுக்கான இ-பாஸை விண்ணப்பித்துப் பதிவு செய்யலாம்.

இ-பாஸ் இணையதளம் முடங்கியதா?
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் ஏராளமானோர் ஒரே நேரத்தில் இ-பாஸ் விண்ணப்பிக்க முற்பட்டுள்ளனர்.
இதனால், கூடுதல் நபர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படச் சிறிது நேரத்திலேயே இணையதளம் முடங்கியது. இ-பாஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

கோளாறு சரிசெய்யப்பட்டதா?
அதிகப்படியான பயனர்கள் ஒரே நேரத்தில் இ-பாஸ் வாங்க முயன்றதால் அதிக நெருக்கடி உருவாக்கி சர்வர் கோளாறு ஏற்பட்டு இ-பாஸ் பதிவு செய்ய முடியாமல் போனது. இதனால், காலையில் இ-பாஸ் விண்ணப்பிக்க முயன்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், இந்த கோளாறு கவனத்திற்கு வந்ததும் சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டு இப்போது மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.இ-பாஸ் விண்ணப்பிக்க விரும்புவோர் இப்போது தமிழக அரசின் இ-பாஸ் சேவை இணையதளத்தை அணுகலாம்.


Click it and Unblock the Notifications