Aadhaar-ல் 2 முக்கிய மாற்றங்கள்.. இனி மொபைல் வழியாகவே பெயர், விலாசம், மொபைல் நம்பர் மாற்றலாம்.. எப்படி?
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் சேவையில் 2 முக்கியமான மாற்றங்களை அமல்படுத்த உள்ளது. ஒன்று - க்யூஆர் அடிப்படையிலான இ-ஆதார் முறை. இன்னொன்று - உங்கள் மொபைல் வழியாகவே உங்கள் பெயர், முகவரி மற்றும் பலவற்றை மாற்றும் நடைமுறை
முதல் மாற்றம் - யுஐடிஏஐ ஆனது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் க்யூஆர் குறியீடு இயக்கப்பட்ட இ-ஆதார் (QR code-enabled e-Aadhaar system) முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முயற்சி - ஆதார் வைத்திருப்பவர்கள் அனைவருமே தங்கள் அடையாளத்தை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க அனுமதிக்கும். அதாவது அங்கீகாரத்திற்காக ஆதார் அட்டையின் நகல்களை எடுத்து செல்லவோ அல்லது சமர்ப்பிக்கவோ வேண்டிய தேவையை நீக்கும்.

தற்போதுள்ள 1 லட்சம் ஆதார் அங்கீகார சாதனங்களில் சுமார் 2,000 சாதனங்கள் க்யூஆர் அடிப்படையிலான அமைப்பை ஆதரிக்கும் வகையில் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டு உள்ளன என்பதை யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.
அனைத்து சாதனங்களும் க்யூஆர் அடிப்படையிலான அமைப்பை ஆதரிக்கும் படி செயல்படுத்தப்பட்டவுடன், டிஜிட்டல் க்யூஆர் ஸ்கேன்களை பயன்படுத்தி அடையாளச் சரிபார்ப்புகளை முடிக்க முடியும், இது தனிநபர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ஆகிய இருவருக்குமே சரிபார்க்கும் செயல்முறையை () எளிதாக்கும்.
இரண்டாவது மாற்றம் - க்யூஆர் மேம்படுத்தலுடன் சேர்த்து யுஐடிஏஐ ஆனது புதுப்பிக்கப்பட்ட ஆதார் மொபைல் ஆப்பையும் அறிமுகம் செய்கிறது. இந்த ஆப் ஆனது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து நேரடியாக பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற பெரும்பாலான தனிப்பட்ட விவரங்களில் மாற்றங்களை செய்ய உதவும். இதன் மூலம் ஆதார் பதிவு மையங்களுக்கு நேரில் வருகை தர வேண்டிய அவசியம் மெல்ல-மெல்ல குறையும்.
இது நவம்பர் 2025 முதல் செயல்படுத்தப்படலாம். அதன் பிறகு கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் சரிபார்ப்பு பணிகளுக்கு மட்டுமே பதிவு மையங்களுக்கு நேரில் வருகை தர வேண்டியிருக்கும். மற்ற அனைத்து அப்டேட்களையும் புதிய இ-ஆதார் ஆப்பின் மூலம் டிஜிட்டல் முறையில் முடிக்க முடியும். இது ஒட்டுமொத்த செயல்முறையையும் காகிதமற்றதாகவும், வசதியாகவும் மாற்றும்.
இந்த புதிய அமைப்பானது - பிறப்பு சான்றிதழ்கள், பான் கார்டுகள், பாஸ்போர்ட்கள், ஓட்டுநர் உரிமங்கள்,பிடிஎஸ் அமைப்பின் கீழ் உள்ள ரேஷன் கார்டுகள், எம் என்ஆர்இஜிஏ (MNREGA) பதிவுகள் மற்றும் முகவரி சரிபார்ப்புக்கான மின்சார பில் பதிவுகள் உள்ளிட்ட அரசாங்க தரவுத்தளங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பயனர் தகவல்களை நேரடியாக பெறும்.
யுஐடிஏஐ-யின் இந்த புதிய நடவடிக்கை ஆதார் மோசடி அபாயங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆதார் வைத்திருப்பவர்களுக்கு அடையாள சரிபார்ப்பு பாதுகாப்பாகவும் அணுகக்கூடியதாகவும் இருப்பதையும் உறுதி செய்கிறது.
புதிய க்யூஆர் குறியீடு சரிபார்ப்பு முறை ஏற்கனவே துணைப் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் பாதுகாப்பான அடையாள உறுதிப்படுத்தல் கருவியாக சோதிக்கப்படுகிறது. இந்த அமைப்பு தனியுரிமை பாதுகாப்புகளுடன் செயல்படும், இது தனிப்பட்ட தகவல்கள் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே பகிரப்படுவதையும் உறுதி செய்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, பள்ளி மாணவர்களுக்கான பயோமெட்ரிக் சேர்க்கை இயக்கங்களை நடத்துவதற்காக சிபிஎஸ்இ (CBSE) போன்ற கல்வி வாரியங்களுடன் யுஐடிஏஐ ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த முயற்சிகள் ஐந்து முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகளுக்கும், மீண்டும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கும் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டை செய்வதை இலக்காக கொண்டுள்ளன, இதன் மூலம் அவர்களின் ஆதார் விவரங்கள் அப்டேடட் ஆக, தற்போதைய நிலையில் இருப்பதை உறுதி செய்யது முடியும்.


Click it and Unblock the Notifications








