கேபிள் மற்றும் டிடிஎச் விலையை குறைக்க டிராய் அதிரடி முடிவு! என்ன மாற்றம் தெரியுமா?
கேபிள் டிவி மற்றும் டிடிஎச் டிவி சந்தையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற நோக்கத்தில் தோளைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு பல புதிய மாற்றங்களைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு களமிறக்கியது. ஆனாலும் கூட அந்த முயற்சி பயனளிக்காதததை தொடர்ந்து சில புதிய மாற்றங்களை அமல்படுத்தவுள்ளது.

வெளிப்படைத்தன்மை இருந்தாலும் விலை அதிகம்
கேபிள் டிவி மற்றும் டிடிஎச் டிவி சந்தாக்களின் விலையைக் குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்குப் பின்தான் சேனல்களின் விலை அதிகரித்துள்ளது என்று கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர். வெளிப்படைத்தன்மை இருந்தாலும், மக்களுக்கு ஏற்றதாக இல்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதே உண்மை.

100 சேனல் பேக் விலை என்ன?
மக்களின் அசவுகரியத்தை உணர்ந்த டிராய் அமைப்பு மீண்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. தற்பொழுது நடைமுறையில் இருக்கும் விதிமுறையின்படி 100 சேனல்கள் கொண்ட பேக்கை பெற ரூ.130 செலுத்தவேண்டும், ஜி.எஸ்.டி.யுடன் ரூ.153.40 என்ற விலையில் இப்பொழுது கிடைக்கிறது. இந்த தொகை NCFக்கு மட்டுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

75 சேனல்களை மட்டுமே பயன்படுத்த முடியும்
இந்த விதிமுறைப்படி நீங்கள் தேர்வு செய்யும் 100 சேனல்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இலவச சேனல்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இந்த 100 சேனல்களில் 25 இலவச தூர்தர்ஷன் சேனல்கள் கட்டாயமாக வந்துவிடும். மீதம் உள்ள 75 சேனல்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

கூடுதல் சேனல்களுக்கு என்ன கட்டணம் செலுத்த வேண்டும்?
இத்திட்டத்தின்படி வழங்கப்படும் 100 சேனல்களுக்கு மேலாக உங்களுக்கு கூடுதல் சேனல்கள் வேண்டுமென்றால், கூடுதல் கட்டணமாக ரூ.23.60 செலுத்திக் கூடுதலாக 25 சேனல்களை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் எச்.டி தர சேனல்களை தேர்வு செய்தால் இரண்டு சேனல்களுக்கான இடத்தை பிடித்துக்கொள்ளும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

புதிய மாற்றங்கள் மற்றும் விதிமுறை
இதுதான் டிராய் இப்பொழுது வரை கடைபிடித்து வழங்கி வந்த திட்டம் விதிமுறைகள். ஆனால் தற்பொழுது டிராய் புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது, இதற்கு முன்பு வழங்கப்பட்ட கட்டமான ரூ.153.40 விலையில் இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு 200 சேனல்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த 200 சேனல்கள் அப்படியே வழங்கப்படும், குறிப்பாக அரசின் 25 இலவச தூர்தர்ஷன் சேனல்கள் கட்டாயமாக இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய காம்போ பேக் விதிமுறைகள்
மக்களுக்கு பயனளிக்கும் காம்போ பேக்களிலும் சில மாற்றங்களை டிராய் செய்துள்ளது. இதன்படி ரூ.12-க்கு குறைவான விலையில் இருக்கும் சேனல்கள் மட்டும் தான் இனி காம்போ திட்டத்தின் கீழ் இடம்பெற முடியும். மேலும், ஒரு காம்போ பேக்கில் இருக்கும் சேனல்களின் மொத்த விலை அந்த காம்போ பேக்கின் விலையைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் இருக்கக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டிற்குள் தான் இனிமேல் காம்போ பேக்குகள் இருக்க வேண்டும்.

ஜனவரி 15ம் தேதிக்குள் புதிய விலை நிர்ணயம்
டிராயின் இந்த சில மாற்றங்களால் ஒட்டுமொத்த எம்.ஆர்.பி விலையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், விலை குறைக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. இந்த புதிய விதிமுறைப்படி புதிய விலைகளை சேனல்களுக்கு அந்நிறுவனங்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 2020 முதல் இந்த புதிய விதிமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications