ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் கேன்சல் செய்ய போறீங்களா? வருகிறது புது ரூல்ஸ்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் ரயில் பயணத்தை அதிக மக்கள் விரும்புகின்றனர். அதேபோல் இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் புதிய வசதியை அறிமுகம் செய்து கொண்டே உள்ளது. இந்நிலையில் ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு திட்டத்தை மாற்றி டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு அதிகபட்ச ரீஃபண்ட் கிடைக்கும். இதில் ரயில்வே நிர்ணயித்துள்ள நிலையான குறைந்தபட்ச கட்டணம் (Flat Cancellation Charge) மட்டுமே பிடிக்கப்படும். அதுவும் இது நீங்கள் பயணம் செய்யவிருந்த வகுப்பைப் (AC, Sleeper) பொறுத்து ரீஃபண்ட் தொகை மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் உங்கள் டிக்கெட் தொகையில் 25 சதவீதம் அபராதமாகப் பிடிக்கப்படும். மீதமுள்ள 75 சதவீதம் தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும்.
நீங்கள் பயணத்திற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யும் பட்சத்தில், டிக்கெட் கட்டணத்தில் சரிபாதி அதாவது 50 சதவீதம் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது. அதாவது 100 சதவீதத் தொகையும் ரத்து கட்டணமாகவே கருதப்படும்.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தற்போது ரயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் போடப்படுகிறது. சார்ட் போட்ட பிறகு நீங்கள் கேன்சல் செய்தால் ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட வராது. நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
குறிப்பாக இந்த டிக்கெட் ரீஃபண்ட் விதிகள் ஆன்லைன் (E-tickets) மற்றும் ரயில்வே கவுண்ட்டர்களில் வாங்கும் கன்பார்ம் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ரீஃபண்ட விதிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரும்.
இந்திய ரயில்வே புதிய திட்டம்
அதேபோல் சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்திய ரயில்வே அமைப்பு அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் மக்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச உணவு, இலவச டிக்கெட் வழங்கும் புதிய திட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் ரயில் பயணிகள் இலவச டிக்கெட், தேநீர், சிற்றுண்டிகள், உணவு போன்றவற்றைப் பெற முடியும்.
குறிப்பாக இந்த புதிய திட்டத்தின் மூலம் பயணிகள் இந்திய ரயில்வேயின் வசதிகளை இலவசமாகப் பெற முடியும் என்பதுடன் ஒவ்வொரு பயணத்திற்கும் வெகுமதிகள் கிடைக்கும். இதற்காக இந்திய ரயில்வே ஒரு விசுவாசத் திட்டத்தை (loyalty program) தொடங்க உள்ளது. குறிப்பாக இந்த விசுவாசத் திட்டத்தின் கீழ் தான் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கிலோ மீட்டர் அடிப்படையில் வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படும்.
அதுவும் இந்த புள்ளிகள் மூலம் பயணிகள் உணவு முதல் பயணக் கட்டணம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பயணிகள் பயணிக்கும் தூரம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்கள் பெறும் வெகுமதி புள்ளிகளும் (Rail Points) அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது, அவர்கள் பெற்ற வெகுமதி புள்ளிகள் அடிப்படையில் கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம் அல்லது ஒரு முழுமையான பயணச்சீட்டை இலவசமாகப் பெறலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை ரயில் இ-கேட்டரிங் மூலம் இலவசமாக ஆர்டர் செய்ய முடியும். மேலும் பயணத்தின் போது ரயில் நிலையத்தின் சொகுசு ஓய்வறைகளில் இலவச உணவை உண்டு மகிழவும் முடியும். இதுதவிர வெகுமதி புள்ளிகளின் அடிப்படையில் டிக்கெட்டுகளை மூன்றாம் ஏசி-யிலிருந்து இரண்டாம் ஏசி-க்கும், இரண்டாம் ஏசி-யிலிருந்து முதல் ஏசி-க்கும் மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ரயில்களில் முன்னோட்டமாகச் செயல்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








